மன்னார் சிறுவன் மட்டக்களப்பு கடலில் மரணம் !

ஜவ்பர்கான்
 மன்னார் பணங்கொட்டிகொட்டு கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி கடற்கரையில் மரணமாகியுள்ளார்.இச்சம்பவம் நேற்று ஞாயிறு மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரிலிருந்து மட்டக்களப்பு சொறிக்கல்முனை தேவாலய திருவிழாவிற்காக அந்தோணிப்பிள்ளை விஜயன் தலைமையிலான உறவினர்கள் வருகை தந்துள்ளனர்.
அக்குழுவினர் நேற்று மாலை பொழுதைக்கழிப்பதற்காக கல்லடி கடற்கரையோரம் அமர்ந்திருந்தபோது மேற்படி நபரின் மகனான 4 வயது நிரம்பிய அந்தோணிப்பிள்ளை விஜயன் அசன்சன் என்ற சிறுவன் கடலோரம் நீருடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென விழந்து இறந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சிறுவன் பிறந்து ஆறு மாதங்களில் இருதய சத்திர சிகிச்சைக்குள்ளாகிருந்தவர் என உறவினர்கள் தெரிவித்தனர்.
சிறுவனின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.