அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

maiththiri
08வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமானபோது விஷேட உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஐக்கியம் பாதுகாக்கப்படும் எனவும் முப்படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

இலங்கை பாராளுமன்றில் ஒரு பிரதான கட்சி 32 வருடங்களாகவும் மற்றொரு பிரதாண கட்சி 31 வருடங்களாகவும் ஆட்சி செய்து வந்த நிலையில், இன்று கூடியுள்ள புதிய பாராளுமன்றம் இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். 

யுத்த காலத்தில் தேசிய அரசாங்கத்தின் தேவை காணப்பட்ட போதும், அளும் கட்சி எதிர்க்கட்சி அரசியலே முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் ஜனவரி 08ல் தான் பதவியேற்ற பின் சமரச தேசிய அரசாங்கம் உருவாவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். 

இதுவரை இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணையும் விதமான அரசியல் யாப்பு ஒன்றறை உருவாக்க முடியாது போனதாக தெரிவித்த ஜனாதிபதி புதிய ஆட்சியில் விருப்பு வாக்கு முறை இல்லாத தேர்தல் திருத்த சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அதற்கான அடிப்படைத் தேவை பூர்த்தி் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் போன்றவை ஒன்றிணைந்து இதனை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.