இலங்கை-அமெரிக்க பேச்­சு­வார்த்­தை­களை நடை­மு­றைக்கு கொண்­டு­வ­ரு­வதே எமது சந்­திப்பின்நோக்கம்!

mangala-samaraweera_650x400_41435145071

இலங்கை மற்றும் அமெ­ரிக்க நாடு­க­ளுக்­கி­டையில் தொடர்ச்சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் பேச்­சு­வார்த்­தை­களை நடை­மு­றைக்கு கொண்­டு­வ­ரு­வதே எமது சந்­திப்பின்நோக்கம் என வெளி­வி­வ­கா­ரத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

 

அமெரிக்க பிரதிநிதி நிஷா பிஷ்வாலுடனான சந்­திப்பின் போது நல்­லாட்­சிக்­கான வேலைத்­திட்டம் மற்றும் நாட்டின் சுயா­தீன நீதிச்­சேவை, மனித உரி­மை­களை பாது­காத்தல் தொடர்­பி­லான அடுத்­த­கட்ட வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது குறித்தும் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்க பிரதி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா தேசாய் பிஷ்­வா­லு­ட­ன் நேற்று இரு தரப்பு சந்திப்பை நடத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சில் இச்சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் பின்னர் அமைச்சர் சமரவீர தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்;

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் நாட்டில் ஏற்­பட்ட மாற்­றத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்னை வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மித்­துள்ளார்.நான் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக பதவி ஏற்ற பின்னர் எனது உத்­தி­யோக பூர்வ சந்­திப்­பினை அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் நிஷா பிஷ்­வா­லுடன் மேற்­கொண்­டுள்ளேன், இந்த சந்­திப்­பா­னது இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான உற­வினை பலப்­ப­டுத்தும் வகையில் அமையப் பெற்­றுள்­ளது. குறிப்­பாக முன்­னைய காலங்­களில் நாம் ஏற்­ப­டுத்­திக்­கொண்ட புரிந்­து­ணர்­வு மற்றும் உடன்­ப­டிக்­கை­களை தொடர்ந்தும் முன்­னெ­டுத்து செல்­வது தொடர்பில் நாம் இரு­த­ரப்­பி­னரும் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம்.

கடந்த மே மாதம் அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கேரி இலங்­கைக்­கான விஜ­யத்­தினை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் அவ­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தையின் போது பல வெற்­றி­க­ர­மான முன்­னேற்­றங்­களை கண்­டி­ருந்தோம். அதை தொடரும் வகையில் இப்­போது இரண்டாம் கட்­ட­மாக இந்த பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். கடந்த காலங்­களில் வெறு­மனே பேச்­சு­வார்த்­தை­களில் மாத்­தி­ரமே இரு நாடு­களின் செயற்­பா­டுகளும் நகர்ந்­தன. ஆனால் பேச்­சு­வார்த்­தை­களை செயற்­பா­டு­க­ளாக ,மாற்றும் வகை­யி­லேயே இந்த சந்­திப்பு நடை­பெற்­றுள்­ளது.

மேலும் நாட்டில் சுயா­தீ­ன­மான தேர்தல் நட­வ­டிக்­கைகள் நடை­பெற வேண்டும் எனவும், மனித உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும் எனவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூறியிருந்தார்.

அதற்­க­மைய இம்­முறை அமை­தி­யா­ன­தொரு தேர்தல் நடை­பெற்­றுள்­ளது. அதேபோல் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­வைத்­தி­ருந்த நல்­லாட்­சிக்­கான வேலைத்­திட்டம் மற்றும் நாட்டின் சுயா­தீன நீதிச்­சேவை, மனித உரி­மை­களை பாது­காத்தல் தொடர்­பி­லான அடுத்­த­கட்ட வேலைத்­திட்­டங்­களை இன்­றைய பேச்­சு­வார்த்­தையில் நாம் கலந்­து­ரை­யா­டினோம்.

மேலும் இலங்கை மற்றும் அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகள் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். இரண்டு நாடு­களும் மிகவும் நெருக்­க­மான பொரு­ளா­தார உற­வினை பேணி வரு­கின்­றன. இலங்­கையின் ஏற்­று­ம­தியில் அதிக பங்கு அமெ­ரிக்­காவை சார்ந்தே உள்­ளது. இலங்­கையின் மொத்த ஏற்­று­மதி சந்­தையில் 23 வீத பங்­கினை அமெ­ரிக்­காவே பெறு­கின்­றது. எனவே நாம் எமது வர்த்­தக உற­வினை மேலும் பலப்­ப­டுத்­தவும் இரு நாடு­க­ளுக்கு இடையிலான பொருளாதார அபிவிருத்தியை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமெரிக்க முதலீட்டார்கள் வரவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இலங்கை மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையில் மிகவும் நெருக்கமான உறவுகள் இருந்து வருகின்றன. அந்த உறவினை மேலும் பலப்படுத்தும் வகையில் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்றார்.