மது விலக்கு போராட்டத்தில் விஜகாந்த் உள்ளிட்டோர் கைது !

maxresdefault_Fotor
மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி சென்னையில் அனுமதியின்றி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டார். 

காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. 4 ஆம் தேதி நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவில் மதுவுக்கு எதிரான எழுச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கோயம்பேடு முதல் கோட்டை வரை மனித சங்கிலி போராட்டம் நடத்த தே.மு.தி.க முடிவு செய்தது. இதற்கு காவல்துறை அனுமதி தரவில்லை 

இதையடுத்து போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தே.மு.தி.க சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் திட்டமிட்டப்படி சென்னை கோயம்பேட்டில் இன்று மாலை விஜயகாந்த் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது. 

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அவர்களை கலைந்து போகும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் விஜயகாந்த் அதனை ஏற்க மறுத்து தனது ஆதரவாளர்களுடன் கைகோர்த்து மனித சங்கிலி போராட்டத்தை தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் உள்பட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். 

இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மனித சங்கிலி போராட்டம் நடத்திய தே.மு.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர்.