பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தமக்கு அறிவிக்க வேண்டும் – சபாநாயகர் சமல் ராஜபக்ஸ!

chamal-rajapaksa

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ​ஆணைக்குழுவிற்கு அழைக்கும் நடவடிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையிலும் சபை நடவடிக்கைகள் இன்று (21) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றம் இன்று கூடியபோது கருத்து வெளியிட்ட சபாநாயகர் சமல் ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன பாராளுமன்றத்தில் நேற்று (20) எழுப்பிய சிறப்புரிமை கேள்வி குறித்து விளக்கமளித்தார்.

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை பாராளுமன்றத்திற்கு விடுக்கப்படுகின்ற அழுத்தமாகும் என தினேஸ் குணவர்தன நேற்று (20) சுட்டிக்காட்டியிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவும் தம்மை தெளிவுபடுத்த வேண்டியதே மிகவும் உகந்தது என சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் அல்லது பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தன்னிச்சையான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.