யுத்தத்தினால் உருக்குலைந்து காணப்படும் தொழிற்சாலைகளை மீள புனரமைக்க ரிசாத் நடவடிக்கை

 

சுஐப் எம் காசிம்

 

 யுத்தம் விட்டுச் சென்ற வடுக்கள் பல. உயிரழிவுகள் ஒரு புறம் இருக்க பொருளாதார ரீதியிலும் மானத ரீதியிலும் ஏற்பட்ட இழப்புக்கள் சொல்ல முடியாதவை. 

elephant_Fotor

வடமாகாண மக்களின் பொருளாதாரத்திற்கு ஈடு கொடுத்து பலருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கிய தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு கிடக்கின்றன. வடமாகாணத்தில் அமைந்துள்ள காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை, ஆனையிறவு – குறிஞ்சக்கேணி உப்பளம் ஒட்டு சுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை ஆகியவை யுத்தத்தினால் உருக்குலைந்து போய்விட்டன. 

இந்த தொழிற்சாலைகளை மீளக்கட்டியெழுப்பி, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வடபகுதி மக்களின் வாழ்விலே எழுச்சியைக்காணவும் ஜனாதிபதி மைத்திரியும் ரணில் விக்கிரமசிங்கவும் திட்டங்களை வகுத்துள்ளனர். 

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வடமாகாணத்தில் பிறந்தவர். வடமாகாணத்தின் ஒரேயொரு கெபினட் அமைச்சராக பணியாற்றும் அவர் இந்தத் தொழிற்சாலைகளை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென்பதில் கரிசனைக் கொண்டு அரச தலைமைக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். அது மட்டுமன்ரி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதனும் இந்தத் தொழிற்சாலைகளை இயங்கச் செய்யவேண்டுமென்பதில் ஆர்வம் கொண்டு அமைச்சர் ரிஷாட்டுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

kks1_Fotor

 

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிச் செயலிழந்து போன காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை நவீன உருப்பெற்று விளங்கிவதற்கான முயற்சிகளை கடந்த 25ஆம் திகதி அமைச்சர் ரிஷாட் மேற்கொண்டார். இந்த சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பிப்பது தொடர்பில் யாழ் கச்சேரியில் அரச அதிபர் ந வேதநாயகன் தலைமையிலான உயர்மட்டக் கூட்டத்தில் ரிஷாட் தனது நோக்கத்தை வெளிப்படுத்தி அங்கு பிரசன்னமாயிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரதிநிதிகளுடனும் வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களுடனும் பேச்சு நடத்தி அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார். முன்னதாக சீமெந்து தொழிற்சாலையையும் அமைச்சர் பார்வையிட்டார். இந்தக் கூட்டத்தில் எம் பிக்களான சரவணபவன், ஸ்ரீதரன், சித்தார்த்தன், மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் குருகுலராசா, மாகாண சபை உறுப்பினர் ஜனோபர் உட்பட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை சுதந்திரம் அடையும் முன்பே சீமெந்து உற்பத்தியில் சிறந்து விளங்கி நாட்டுக்குப் பெருமை சேர்த்த தொழிற்சாலை கே கே எஸ் சீமெந்து தொழிற்சாலை. 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட இது 1956இல் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. பெயரும் “காங்கேசன் சீமேந்து வேலைகள்” என மாற்றப்பட்டது. இந்தத் தொழிற்சாலை சிறப்புப் பெற அருகில் இருந்த சுண்ணக்கல் பாறைகளே மூலப் பொருளாக உதவின. 

இந்தப் பிரதேசத்தில் இருந்த சுண்ணக்கற் பாறைகள் 80 மில்லியன் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான சீமெந்தை உற்பத்தி செய்யவும் போதுமானதெனக் கருதப்பட்டது. 

 

paranthan 1_Fotor

இந்தத் தொழிற்சாலை தொடர்பான புனர் நிர்மாணம் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் சுண்ணக்கல்லை அகழாமல் வெளியிடங்களிலிருந்து அதனைக் கொண்டு வருவதெனவும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் சுற்றாடல் பாதிப்பிக்களை கருத்திற் கொண்டு சீமெந்து உற்பத்தி தொழிற்சாலை இயந்திரங்களில் இலத்திரனியல் தூசு உறிஞ்சுகளை பயன் படுத்துவதெனவும் முடிவு காணப்பட்டது. 

அமைச்சர் ரிஷாட் அனைவரது ஒத்துழைப்புக்கும் அங்கு நன்றி கூறியதுடன் துரித கதியில் வேலைகள் நடைபெறுமென உறுதியளித்தார். இந்தத் தொழிற்சாலைப் புனரமைப்பு நாட்டின் சீமெந்து தேவையை பூர்த்தி செய்வதுடன் தரமான சீமந்தைப் பெறவும் பலருக்கு தொழில் வாய்ப்பு அளிக்கவும் பயன்படுமெனவும் கூறினார். 

சர்வதேச தரத்துக்கு உகந்ததாகவே ஆரம்ப உற்பத்தி அமையுமெனவும் அமைச்சர் கூறினார். புதிய சீமெந்து உற்பத்தியானது (கிரீன் சீமெந்து தொழிற்சாலை கருத்திட்டம்) எனும் பசுமையான சீமெந்து தொழிற்சலை உத்தியெனும் நவீன முறைகளுடன் சம்பந்தப்பட்டது. இதனால் காபன் வெளியேறுவது குறைவாகும். 

இலங்கையிலே முதல் தரமான சீமெந்து தொழிற்சாலையாக இது மிளிருமென நம்பப்படுகிறது.

வடபகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் அதிகாரிகளும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு சென்று நேரில் பார்வையிட்டனர். இந்தத் தொழிற்சாலை 525 மில்லியன் செலவில் புனர்நிர்மானம் செய்யப் போவதாக அறிவித்தார். 

217 ஏக்கர் பரப்பளவு காணியில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையின் புனர்நிர்மான வேலைகள் இந்த ஆண்டு முடிவதற்குள் ஆரம்பிக்கப்படும். இதன் நவீன அமைப்பு நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் என் அமைச்சர் குறிப்பிட்டார். 

இந்த தொழிற்சாலையின் நவீன அமைப்பு மூலம் எமக்குத் தேவையான குளோரினை இறக்குமதி செய்ய வருடந்தோரும் நாம் தற்போது செலவிடும் 9000,000 டொலர் பெறுமதியான அந்நியச் செலாவணியை மீதப்படுத்த முடியும். 

பரந்தன் தொழிற்சாலைக்குத் தேவையான உப்பை ஆணையிறவு உப்புத் தொழிற்சாலையில் பெற்றுக்கொள்ள முடியும். 

அரசுக்குச் சொந்தமான முன்னைய பரந்தன் தொழிற்சாலை 1954இல் நிர்மாணிக்கப்பட்டது. பரந்தன் அரச, இரசாயனத் தொழிற்சாலை என்ற பெயரில் இது இயங்கி வந்தது. உப்பைப் பிரதான மூலப் பொருளாகப் பாவித்து கோஸ்டிக் சோடா உற்பத்தி செய்யப்பட்டது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆனையிறவு உப்பளத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். தற்போது அங்கு 355 ஏக்கரில் செய்கைப் பண்ணப் பட்டிருக்கும் உப்புப் பாத்தியை பார்வையிட்ட அமைச்சர் இன்னும் செய்கைப் பண்ணப்படாதிருக்கும் அதே அளவு பரப்பைக் கொண்ட அடுத்தத் தொகுதி உப்பு வாய்க்கால்களையும் செய்கைப் பண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை பணித்தார். 

அத்துடன் ஆனையிறவுடன் தொடர்புபட்ட குறிஞ்சாக்கேணி உப்பத்தை ஆரம்பிப்பது தொடர்பிலும் அங்கு கலந்துரையாடினார். தற்போது நமது நாட்டுக்கென வெளிநாடுகளிலிருந்து 20% ஆன உப்பு இறக்குமதி செய்யப்படுகின்றது. இதனை முழுதாகக் கட்டுப் படுத்துவதே அரசின் நோக்கமாகுமென்று குறிப்பிட்ட அமைச்சர் உப்பு உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு அடையுமென நம்பிக்கை தெரிவித்தார். 

அங்கு சமூகமளித்திருந்த உப்பு உற்பத்தியாளார்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்களின் பிரச்சினைகளை நிவர்த்திப்பதாகவும் உறுதியளித்தார். அமைச்சருடனான வட பகுதி விஜயத்தின் போது யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மாந்தை சோல்டன் உப்புக்கூட்டுத்தாபனத்தலைவர் எம் எம் அமீன், சீமெந்துக் கூட்டுத்தபனத்தலைவர் ஹுஸைன் பைலா, சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரியாஸ் சாலி, மௌலவி சுபியான் உட்பட அமைச்சு அதிகாரிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.