தானியங்கி கார்களை தயாரிக்க போர்ட் நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம்?

 

Unknown
எல்லா தேடல்களுக்கும் விடை தரும் இணைய ஜாம்பவானான கூகுள் கடந்த சில வருடங்களாகவே பல்வேறு தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது நீண்ட நாள் ஆய்வின் பலனாக தனது முதல் தானியங்கி காரை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. சோதனை ஓட்டம் முடிந்து வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்த இந்த தானியங்கி கார் தயார் நிலையில் உள்ளது.

கலிபோர்னியாவில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மாநாடு ஒன்றில் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான செர்கே பிரின் இந்த காரின் தோற்றப் படங்களை வெளியிட்டார். மக்களைப் பயப்படுத்தாதவிதத்தில் நட்பு உணர்வு வெளிப்படும்விதமாக இந்த காரின் முன்புறத் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருவருக்கான இருக்கைகள் கொண்ட இந்த கார் மின்சார சக்தியில் இயங்கும். தானியங்கித் தொழில்நுட்பத்தை மக்கள் ஏற்கும்வகையிலும் இந்த கார் அமைக்கப்பட்டவுள்ளது என அவர் தெரிவித்தார்.

மற்ற கார்களைத் தழுவி தனது காரை உருவாக்காமல் மணிக்கு 25 மைல் செல்லும்விதமாக முற்றிலும் பிரத்தியேகமாக தனது காரை உருவாக்கியுள்ள கூகுள் தனது புதிய தொழில் நுட்பத்தால் தானியங்கி கார்களின் முன்னோடியாக இருக்கிறது. தானியங்கி பார்க்கிங் வசதி போன்ற பகுதி அல்லது முழுமையான தானியங்கி கார்களை பல நிறுவனங்கள் தயாரிக்க திட்டமிட்டு வந்தாலும், இதுவரை முழுமையான தானியங்கி வசதி கொண்ட கார் எதுவும் சந்தைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை கார்கள் கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக சாலைகளில் வலம்வந்து கொண்டுள்ள நிலையில் வர்த்தகரீதியாக வரும் 2020-ம் ஆண்டுக்குள் இதுபோன்ற லட்சக்கணக்கான கார்களை தயாரித்து, விற்பனை செய்வதில் கூகுள் நிறுவனம் முனைப்புகாட்டி வருகின்றது.

இதற்காக, அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஃபோர்ட்’ கம்பெனியுடன் கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச மின்சார உபகரணங்கள் கண்காட்சியின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.