தேசியப் பட்டியல் ஊடாக சாய்ந்தமருது ஜெமீலை பாராளமன்றம் அழைத்துச் செல்வேன் பத்திரிகையாளர் சந்திப்பில் றிசாத்

DSC_0054_Fotor

-எம்.வை.அமீர்-

ஏனைய கட்சிகளைப் போன்று ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்புரிமையை தருவோம் என்று மக்களை ஏமாற்றும் கட்சி தங்களது கட்சி இல்லை என்று தெரிவித்த அமைச்சர் றிசாத், எங்களது கட்சி சொல்வதையே செய்யும் என்றும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தங்களது கட்சிக்கு கிடைக்கவிருக்கின்ற தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தில் ஒன்றை ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸின் காங்கிரசின் கோட்டையான சாய்ந்தமருதில் இருந்து தங்களுடன் இணைந்து கொண்டுள்ள மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கு வழங்கி அவரை இம்முறை பாராளமன்றத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாத் பதியூதீன் தெரிவித்தார்.

மாகாணசபை உறுப்பினர் ஜெமீலது இல்லத்தில் 2015-07-25 ம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட காரியாலய திறப்புவிழாவும் அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது சீ பிரீஸ் வரவேற்பு மண்டபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பும் இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக காலமாக இப்பிராந்திய மக்கள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் அதன் வெளிப்பாடே அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் மக்கள் இணைந்து வருவதாகவும் நாட்டில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அவர்களை அரவணைக்கும் எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் உங்களது தேவைகளை நிறைவேற்றித் தருகிறோம் அவ்வாறு உங்களது குறைகளை நிறைவேற்ற வில்லையென்றால் கட்சியை கலைத்து விட்டு சென்று விடுகிறோம் என்றும் மக்களுக்குப் பயன்படாத கட்சியோ அல்லது எந்த அமைப்புகளோ அவசியமற்றது என்றும் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இறுக்கமான ஒப்பந்தத்தை செய்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் றிசாத் பதியூதீன், புத்திசாதுரியமான ஒப்பந்தத்தின் ஊடாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாராளமன்ற பிரதிநிதித்துவம் 11 வரை செல்லும் என்றும் தங்களது கட்சி இந்த நாட்டில் தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறும் என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சிசபை கோரிக்கை தொடர்பாக வினவியபோது தங்களது கட்சியின் தீர்மானத்துக்கு அமைய தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்பினராக செல்லவுள்ள தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் இப்பிராந்திய மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்றும் அழுத்தமாக தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், தேசிப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல், மக்கள் காங்கிரஸ் தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி, செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், முன்னாள் எம்.பி.யும் முதன்மை வேட்பாளருமான எஸ்.எஸ்.பி.மஜீத், முன்னாள் உபவேந்தரும் வேட்பாளருமான எஸ்.எம்.எம்.இஸ்மாயில், கல்முனை முன்னாள் மேயரும் வேட்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உட்பட பத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

a_Fotor

புதிய மாவட்ட காரியாலய திறப்புவிழாவின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிதீவிர ஆதரவாளர்கள் ஏ.எம்.ஜெமீலின் தலைமையில் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

da_Fotor c_Fotor