கறுப்புப் பணம் யாரிடம் உள்ளது? போட்டுடைக்கிறார் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்!

 

image

 

ஊடகப் பிரிவு

 குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களிப்பார்களாயின் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பது இலகுவான காரியம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் அக்கட்சி சார்பான ஐ.தே.க. தேசியப் பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் டாக்டர் ஷாபி சஹாப்தீனின் குருநாகல் நகர தேர்தல் காரியாலயத் திறப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

“குருநாகல் மாவட்டத்தில் 83 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தும் இதுவரை காலமும் இங்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் இருந்து வந்துள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் பல கட்சிகளில் பலர் போட்டியிட்டு வாக்குகள் சிதறடிக்கப்பட்டதே காரணமாகும். ஆனால் இம்முறை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் வகுத்துள்ள தேர்தல் வியூகத்தினால் இம்மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக ஒரு முஸ்லிம் வேட்பாளரே களமிறக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பல்வேறு குத்து வேட்டுகளுக்கு மத்தியில் டாக்டர் ஷாபி எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார். வேறு எந்தக் கட்சியிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்படவில்லை.

ஆனால் வட மேல் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் றிஸ்வி ஜவஹர் ஷா, இறுதி நேரத்தில் ஐ.தே.க. வேட்பு மனுவில் தனது பெயர் நீக்கப்பட்டே ஷாபியின் பெயர் புகுத்தப்பட்டதாகவும் அதற்காக அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கறுப்புப் பணம் கைமாறப்பட்டிருக்கலாம் எனவும் ஊடகங்களில் குற்றம் சுமத்தியுள்ளார். இது அப்படமான பொய்யாகும். தனது தலைவரின் ஏமாற்று வித்தையை அறியாமல் அவர் கைசேதப்பட்டிருக்கிறார்.

உண்மையில் இம்மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்காக பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தூர நோக்குடன் சிந்தித்து மேற்கொண்ட தேர்தல் வியூகத்தை சீர்குலைப்பதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுப்பத்திரத்தில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை நீக்க முயற்சித்து, அது தோல்வியடைந்தன்மையினால் இறுதி நேரத்தில் எமது கட்சி வேட்பாளரை வாபெஸ் பெற்றுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட தேர்தல் உடன்பாட்டின் பிரகாரம் எமது கட்சிக்கு ஒரு வேட்பாளர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி எமது வேட்பாளர் டாக்டர் ஷாபி ஐ.த.க. வேட்பு மனுப் பத்திரத்தில் ஆரம்பத்திலேயே கையொப்பமிட்டிருந்தார்.

அதேபோன்று முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒரு வேட்பாளர் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் மு.கா. தமது கட்சி வேட்பாளர் மாத்திரமே நிறுத்தப்பட வேண்டும் என்றும் மக்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு இடமளிக்கக் கூடாது என்றும் அடம்பிடித்தது.
இந்த சர்ச்சைக்கு தீர்வாக எமது மக்கள் காங்கிரஸ் கட்சியை வாபஸ் பெறுமாறும் அதற்குப் பகரமாக எமது கட்சிக்கு மேலும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் தருவதாகவும் ஐ.தே.க. தலைமை உறுதியளித்தது. அதற்கு எமது கட்சி இணங்கவில்லை. ஒரே சின்னத்தில் எமது கட்சி வேட்பாளரும் மு.கா. வேட்பாளரும் போட்டியிடுவதில் எமக்கு சிக்கலில்லை என்று எமது கட்சித் தலைமைத்துவம் தெளிவுபடுத்தியது.

ஆனால் மு.கா. தலைவர் அதற்கு இணங்க மறுத்து, ஐ.தே.க.வினால் உறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் ஆசனத்தை ஏற்றுக் கொண்டு தனது கட்சி வேட்பாளரான ஜவாஹர் ஷாவின் பெயரை வாபஸ் பெற்றுக் கொண்டது. அதனாலேயே தனது சகோதரர் உட்பட பலரின் பெயர்களை ரவூப் ஹக்கீம் ஐ.தே.க. தேசியப் பட்டியலுக்கு சிபார்சு செய்துள்ளார்.

இதுதான் உண்மை. ஆனால் ரவூப் ஹக்கீமின் பசப்பு வார்த்தையை நம்பி ஏமாற்றமடைந்துள்ள ஜவஹர் ஷா, உண்மையை தேடி அறிந்து கொள்ளாமல் அவரை வெட்டுவதற்காக அமைச்சர் றிஷாதின் கறுப்புப் பணம் கைமாறப்பட்டிருக்கலாம் என புலம்புகின்றார்.

உண்மையில் கறுப்புப் பணம் யாரிடம் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். புலிகள் காலத்தில் நோர்வே தொடக்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் வரை சமூகத்தின் பெயரால் பணப் பெட்டிகள் பெற்று வந்த தலைமைத்துவம் எது என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் சமூக நலன்களை மாத்திரமே முன்னிறுத்தி போராடுகின்ற ஒரு தலைமைத்துவமாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எதிரணி பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து முதலாவது வெளியேறிய தலைமைத்துவம் அமைச்சர் றிஷாத் பதியுதீனே. அதன் பின்னர் முஸ்லிம்கள் மைத்திரியின் பின்னால் அணி திரண்டதனாலேயே ரவூப் ஹக்கீம் இறுதி நேரத்தில் மக்கள் அலைக்குள் அள்ளுண்டு மைத்திரியை ஆதரிக்க முன்வந்தார்.

மைத்திரியை ஆதரிக்க வேண்டும் என்று கட்சியின் உயர் பீடம் பல தடவைகள் கூடி ஏகமனதாகத் தீர்மானித்த போதிலும் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவியைக் கை விட்டு வெளியேறத் தயாராகவில்லை. கரையோர மாவட்டம், காணிப் பிரச்சினைகள் போன்ற முஸ்லிம்களின் தேவைகள் பற்றி இரு தரப்பினருடனும் பேசுவோம் பேசுவோம் என்று காலத்தை இழுத்தடிப்பு செய்து கொண்டு தனியாக ஓடித் திரிந்தார். செயலாளர் நாயகம் ஹசன் அலியைக் கூட அழைத்துச் செல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தனியாகச் சென்றே பேசினார்.

அப்போதெல்லாம் அவர் என்ன பேசினார் என்பதை தேர்தலுக்குப் பின்னர் அமைச்சர் ரஜீவ விஜேசிங்க ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தியிருந்தார். மைத்திரியை ஆதரிப்பதற்காக ரவூப் ஹக்கீம் பெரும் தொகைப் பணம் கேட்கிறார் என ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக ரஜீவ விஜேசிங்க கூறியிருந்தார். இது தொடர்பில் ரவூப் ஹக்கீம் தன்னுடன் விவாதத்திற்கு வர வேண்டும் என்றும் அவர் சவால் விட்டிருந்தார். அதனை ரவூப் ஹக்கீம் இன்று வரை மறுக்கவில்லை, விவாதத்திற்கு செல்லவுமில்லை. அண்மையில் அமைச்சர் ராஜித சேனாரட்ன, ரவூப் ஹக்கீமை தரக்குறைவாக பேசியதன் பின்னணியும் இதுதான் என்பதை ஜவஹர் ஷா போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அமைச்சர் றிஷாத் அப்படிப்பட்ட ஒரு தலைமைத்துவம் அல்ல. முஸ்லிம்களின் உரிமைகளை பணத்திற்காக விலை பேசுகின்ற தலைமையல்ல. மக்களினால் தரப்பட்ட அரசியல் பலத்தை வைத்துக் கொண்டு பணப் பெட்டிகளுக்காக பேரம் பேசுகின்ற தலைமையல்ல. அவர் வடக்கு மாகாணத்தில் இருந்து உடுத்த உடையுடன் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காகவும் அவர்களது விடிவுக்காகவும் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் போன்று பல சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் போராடி வருவதுடன் பொதுவாக நாட்டு முஸ்லிம்களின் நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றார். இவற்றை ஜவஹர் ஷா அறியாதவர் அல்ல.

ஆகையினால் பணப் பெட்டிகளுக்காக சமூக நலன்களை புறமொதுக்கி செயற்படுகின்ற தலைமைத்துவத்தை முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக நிராகரித்து சமூகத்தின் காவலனாகத் திகழ்கின்ற தலைமைத்துவத்தின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டும்.

அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் சார்பில் போட்டியிடுகின்ற ஒரே ஒரு வேட்பாளரான டாக்டர் ஷாபி சஹாப்தீனை ஆதரிப்பதன் மூலம் தமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து சரித்திர சாதனை படைக்க இம்மாவட்ட முஸ்லிம்கள் தயாராக வேண்டும். மாற்றுக் கட்சிகளில் போட்டி வேட்பாளர்கள் இல்லாதிருக்கின்ற சூழ்நிலையில் நமது வெற்றிக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதனை இம்மாவட்ட முஸ்லிம்கள் தவற விட்டு விடக் கூடாது என நான் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கின்றேன்.

நான் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசில் இணைந்து தேசிய அமைப்பாளராக பொறுப்பேற்று இக்கட்சியின் வெற்றிக்காக நாடு பூராகவும் பிரசாரத்திற்கு களமிறங்கியுள்ள எனக்கு இது முதலாவது நிகழ்வாக அமைந்திருக்கிறது.

அதுவும் இந்த வேட்பாளர் டாக்டர் ஷாபி எனது பல்கலைக்கழக நண்பர் என்ற வகையில் அவரது வெற்றிப் பயணத்தில் இருந்து எனது பிரசாரப் பணியும் ஆரம்பித்திருப்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன். அவர் இப்பகுதி மக்களின் அபிமானத்தையும் நம்பிக்கையையும் பெற்ற செயல் வீரராவார். முஸ்லிம் காங்கிரஸ் போன்று பணத்தை மையப்படுத்தி அவர் வேட்பாளராக தெரிவு செய்யப்படவில்லை. மக்களின் வேண்டுகோளின் பேரிலேயே எமது தலைமைத்துவம் அவரை களமிறக்கியுள்ளது. இன்ஷா அல்லாஹ் அவரது வெற்றி நிச்சயம். அதற்காக பிரார்த்திக்கிறேன்.

இம்முறை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடுகின்ற குருநாகல், அனுராதபுரம், புத்தளம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் மூன்று பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது” என்று குறிப்பிட்டார்.

இப்பிரசாரக் கூட்டத்தில் வட மேல் மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் ஏ.சி.அலவத்த உட்பட மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.