எதிரணியினர் வீசிய பந்து தாக்கியதில் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் இங்கிலாந்தில் மரணம்!

stream_imgகிரிக்கெட் விளையாட்டின் போது, பந்து தாக்கி இலங்கையைச் சேர்ந்த வீரர் பலியான சம்பவம் கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் தமிழ் லீக் 3 ஆவது டிவிஷன் என்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் விளையாடிய இலங்கையைச் சேர்ந்த பாவலன் பத்மநாதன் துடுப்பெடுத்தாடும் போது எதிரணியினர் வீசிய பந்து அவரது நெஞ்சில் பலமாக தாக்கியது.

வலியால் துடித்த பாவலன் முதலில் தான் நன்றாக இருப்பதாக கையால் சைகை காட்டினார். ஆனால் சில அடி தூரம் நடந்த அவர் சுருண்டு கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அம்பியுலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிட்னியில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் அவுஸ்திரேலிய அணியின் பிலிப் ஹியூக்ஸ் பரிதாபமாக பலியானார். உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் மறக்கப்படும் முன்பே கடந்த ஏப்ரல் மாதத்தில் பெங்கால் அணியின் வீரர் அங்கீத் கேஸ்ரி களத்தடுப்பில் ஈடுபடும் போது சக வீரருடன் கவனக்குறைவாக மோதியதில் தலையில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கிரிக்கெட் உலகில் இது போன்று அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் பெரும் அதிர்ச்சியையும், கிரிக்கெட் விளையாட்டின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.