நேர்முகத் தேர்வில் முதலைக்கு முத்தமிட்டால் தான் வேலை!

விநோதமான நேர்முகத் தேர்வு: முதலைக்கு முத்தமிட்டால் தான் வேலை!

வேலைக்கு ஆள்சேர்க்க சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வியப்பூட்டும் ஒரு சோதனையை நேர்முகத்தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள காங்டான் மாகாணத்தில் உள்ள காங்கோழு என்ற இடத்தில் சுகாதாரப் பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்று செயற்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் முதலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சுகாதாரப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

தமது நிறுவனத்தில் 9 விற்பனைப் பிரதிநிதிகளைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்ட அந்நிறுவனம், அதற்கான நேர்முகத்தேர்வு ஒன்றையும் நடத்தியது.

இதைக்கேட்டு வேலையில் சேரும் ஆர்வத்துடன் குவிந்த பலர், வாயிலில் உயிரோடு வைக்கப்படிருந்த ஒரு முதலையை ஆர்வத்துடன் பார்த்தவாறு கடந்து சென்றனர்.

உள்ளே சென்ற பிறகுதான் அவர்களுக்குத் தெரிந்தது, நேர்முகத்தேர்வின் முதல் படியே உயிரோடு இருக்கும் அந்த முதலைக்கு முத்தமிடுவது என்பதுதான்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டுமே ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தது.

அது என்னவென்றால், முதலையின் வாய்ப்பகுதி கட்டப்பட்டிருந்தது தான்.

இந்த முதல் சுற்றில் முதலைக்குத் தைரியமாக முத்தமிடுபவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மட்டுமல்லாமல், ஆயிரம் யுவான் பரிசுத்தொகையைப் பெற முடியும்.

இருந்தாலும் பல பெண்கள் இந்த சோதனைக்கு முன்வரத் தயங்கினர்.
அதேநேரத்தில், ஆண்கள் பலர் மிகுந்த தைரியத்துடன் முன்வந்தனர்.
ஆனால், பெண்களை மட்டுமே பணிக்கு எடுப்பதாகக் கூறிய நிறுவனம், ஆண்களை பங்கேற்கவிடவில்லை.

முதலையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களிலையே தங்களுடய சுகாதாரப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் முதலையின் மீதான அச்சத்தில் இருந்து வெளிவரவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.