ஈ.பி.டீ.பி தனித்து போட்டி !

Douglas-Devananda1-e1348449968903

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 யாழ். நகரிலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘எமது கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என மக்கள் விருப்பம் கொண்டுள்ளனர். அதனடிப்படையில் ‘உரிமைக்கு குரல் உறவுக்கு கரம்’ என்னும் தொனிப்பொருளில் தனித்து போட்டியிடவுள்ளோம்’ என்றார்.

 ‘பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்து நாங்கள் விலகவில்லை. அவர்களுடன் உடன்பட்டு இருக்கின்றோம். எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளோம். தமிழ் மக்களின் கௌரவமான, ஒளியமான எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் நாங்கள் செயற்படுகின்றோம்.

 யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதில் முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகின்றோம். இதற்கு தென்னிலங்கை கட்சியுடன் சேர்ந்திருப்பது, அல்லது பிரிந்து இருப்பது தொடர்பில் பிரச்சினையில்லை. நாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்திருந்ந காலத்தில் யாழ்ப்பாணத்தில் 17,522 ஹெக்டேயர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதி இராணுவத்தினரிடம் இருந்து விடுவிப்பதற்கும் நாங்கள் தான் நடவடிக்கை எடுத்தோம்’ என்றார்.