கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த நன்னீர் மீன்பிடி சங்கங்களுடனான கலந்துரையாடலும் தேவை மதிப்பீடும் !

IMG_9754_Fotor
பாரூக் சிகான் 
வட மாகாண மீன்பிடி அமைச்சினால் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட விரிவாக்கல் அதிகாரியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த நன்னீர் மீன்பிடி சங்கங்களுடனான கலந்துரையாடலும் தேவை மதிப்பீடும் 26.06.2015 அன்று காலை 10.30 மணிக்கு கிளிநொச்சி பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலயத்தில் நடைபெற்றது. 
மேற்படி கலந்துரையாடலில் மீனவர்களின் தேவைகளை இனம் காணுவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதுடன் அமைச்சினுடாக கடந்த காலங்களில் முன்னெடுத்த செயல்த்திட்டஙகளின் மூலம் மீனவர்கள் அடையும் பயன்களை அறியக்கூடியதாக இருந்தது. குறித்த சந்திப்பில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 12 சங்கங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 
மேற்படி சந்திப்பின் மூலம் இரு மாவட்டங்களையும் சேர்ந்த ஒவ்வொரு சங்கங்களிற்கும் என்ன வகையான மீன் குஞ்சுகளை விடுவதன் மூலம் அவர்கள் சிறந்த பயனை அடைகின்றார்கள், எவ்வளவு மீன் குஞ்சுகள் தேவை, எவ்வகையான மீன்பிடி உபகரணங்கள் தேவை மற்றும் எவ்வாறான பயிற்சிகள் வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன. இதனடிப்படையில் கண்ணாடி இழைப் படகுகளை திருத்துவதற்கான பயிற்சி தங்களுக்கு வழங்குமாறு கோரினர்;. பல சங்கங்கள் நீண்ட காலமாக பதிவு செய்யப்படாமல் இயங்கிவருகின்றன அவ்வாறான சங்கங்கள் பதிவை மேற்கொள்வதற்கான உதவியை கோரினர். 
இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து முதற்கட்டமாக 90000 திலாப்பியா இன மீன்குஞ்சுகள் இரணைமடுக் குளத்தில் விடப்பட்டன.                                                                                       
இறுதியாக அக்கராயன்குளம் நன்னீர் மீனவ சங்கத்திற்கு மத்திய அரசினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட  மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டதுடன் அதன் புனரமைப்பு பணிகள் பற்றியும் ஆராயப்பட்டது.         
இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர் திரு. சி. சத்தியசீலன், அமைச்சரின் இணைப்பு செயலாளர் பத்திநாதன் ஜெறோம், அமைச்சின் பிரதம கணக்காளர் திருமதி. அனந்தகிருஷ்னன், (NAQDA) கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட விரிவாக்கல் அதிகாரி திரு. சலிவன் மற்றும்  அமைச்சு அதிகாரிகள் பங்கேற்றனர்.
IMG_9755_Fotor  IMG_9799_Fotor