பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் நிறைவேற்ற முடிவு – நிமல்

 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியுமென சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தெரிவித்துள்ள நிலையில் அதற்கும் முன்னர் அதனை விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்றும் முயற்சியில்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி அடுத்த வாரம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இது தொடர்பாக தீர்மானமெடுக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா  தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 6 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 6.30 மணி+வரை விவாதத்தை நடத்தி அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதேவேளை கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இவ்வேளையில் ஜூலை 3 ஆவது வாரத்தில் இதற்கு அனுமதியளிப்பதாக சபை முதல்வர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் அதற்கு முன்னர் அந்த பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவே நாம் முயற்சிக்கின்றோம். இதன்படி அடுத்த வாரம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து தீர்மானமெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.