கூட்டமைப்பு எம்.பி.க்கள் நிதி பெறவில்லை: மாவை !

 Mavai-Senathirajah-TNA_3

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெற்குக்கு அழைக்கப்பட்டு அரசாங்கத் தரப்பினரால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு, தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றது. இந்தச் சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பவுள்ளேன். இவ்விடயம் தொடர்பில் அறியவேண்டும் எனக்கேட்டுள்ளேன்.

 அவருடைய பதிலைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு உண்மையான விடயத்தை தெரிவிப்போம். பொய்யான செய்திக்கான பதில் வழங்கப்படும்’ என்றார்.