அடுத்த 5 வருடத்திற்கான திட்டம் தன்னிடம் மாத்திரமே உள்ளதாக தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் இன்று(29) வௌியிடப்பட்டது.

‘இயலும் ஸ்ரீ லங்கா’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து விடுவித்து பொருளாதார சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், படிப்படியாக நாட்டை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டுசெல்லும் திட்டங்களும் குறித்த கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கொள்கைப் பிரகடனம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக www.ranil2024.lkஎனும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2022 நெருக்கடிக்கு பின்னர் சரியான பாதையில் செல்வதாகவும் இந்த பயணத்தின் அடுத்த 5 வருடத்திற்கான திட்டம் தன்னிடம் மாத்திரமே உள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவை

2025ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி, அனைத்து அரச ஊழியர்களுக்கும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக மாதாந்தம் 25,000 ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையின் குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் 24% ஆகவும், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் மொத்த சம்பளம் 55,000 ரூபாவாகவும்  ஏனைய அனைத்து பதவிகளுக்கான அடிப்படைச் சம்பளமும் மாற்றியமைக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*40 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்களுக்கு சேவைத் திறனை மேம்படுத்த உதவும் கற்கை நெறிகளுக்காக சம்பளத்துடன் கூடிய விடுமுறை.

* பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகத்தை நிறுவுதல்.

* ஒரு மேம்பட்ட திறன் அடிப்படையிலான உயர் முறை.

* அரசு ஊழியர்களுக்கு மடிக்கணினிகள், டேப்கள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றை சலுகை அடிப்படையில் வழங்குவதன் மூலம் பொதுச் சேவையை திறமையான மற்றும் சீரான நிலைக்கு உயர்த்துதல்.

*அரசின் புதிய வீட்டுத் திட்டத்தில் வீட்டு உரிமை இல்லாத அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்தல்.

* அனர்த்த கடன் தொகையை அதிகரிக்கவும், சொத்து மற்றும் வீட்டுக் கடன்களை மீண்டும் வழங்கவும் செயற்படுவோம்.

* வீட்டிலிருந்து செய்யக்கூடிய சேவைகளை வீட்டிலிருந்து செய்ய அனுமதிக்கப்படுகிறது.

*குறிப்பிட்ட மற்றும் முறையான இடமாற்றத்தை அறிமுகம் செய்தல்.

*ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பள பிரச்சினைகளை தீர்த்தல்

சிரேஸ்ட பிரஜைகள்

* நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய சிரேஸ்ட பிரஜைகள் பராமரிப்பு மையங்களை நிர்மாணித்தல்.

* சிரேஸ்ட பிரஜைகளுக்கான தேசியக் கொள்கையை 2025 இல் திருத்துதல்.

*சிரேஸ்ட பிரஜைகளின் சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையை வளர்ப்பதற்காக பிராந்திய செயலகங்கள் மற்றும் சமூக மன்றங்களால் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல்.

சிறப்புத் தேவைகள் கொண்ட சமூகம்

* மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் 4 வது பிரிவுக்கு இணங்க, அத்தகைய நபர்களின் அனைத்து மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை முழுமையாக உத்தரவாதம் செய்ய 2025 இல் பாராளுமன்றத்திற்கு ஒரு புதிய சட்டம்.

*சைகை மொழி சட்டமூலத்தை நிறைவேற்றி, சிறப்புத் தேவையுடையவர்களுக்கான தேசியக் கொள்கையை உருவாக்குதல்.

*அவர்களுக்கான கட்டிட அணுகல் கொள்கையை அவ்வப்போது திருத்துதல்.

*ஒரு சிறப்பு வேலைவாய்ப்பு ஒதுக்கீடு.

வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், வரி நிவாரணம் வழங்குதல், பொருளாதார மேம்பாடு மற்றும் ‘உறுமய’ மற்றும் ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை செயல்படுத்தல், முதல் கட்டமாக, 100,000 தொழில் வாய்ப்பு, வருமான மூலங்களை வழங்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தெரிவித்தார்.

பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறும் 50,000  பிள்ளைகளுக்கு கைத்தொழில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவுள்ளது.

ரணிலுடன்  நாட்டை வெற்றிகொள்ளும்’ ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் சுமைக் குறைப்பு, பொருளாதாரத்திற்கான திட்டம் மற்றும் ‘உறுமய’, ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை விரிவுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.