“ஸ்வர்ணபூமி” உரிமைப்பத்திரத்தை பயன்படுத்தி தனக்கென 10 அரச சொத்துக்களை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையகப்படுத்தியுள்ளார்

தாம் ஜனாதிபதியாக இருந்த போது வழங்கப்பட்ட “ஸ்வர்ணபூமி” உரிமைப்பத்திரத்தை பயன்படுத்தி தனக்கென 10 அரச சொத்துக்களை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையகப்படுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவர், உயர்நீதிமன்றில் சமர்ப்பித்த சொத்துப் பிரகடனத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன கையகப்படுத்திய பத்து சொத்துக்களில் ஐந்து வீடுகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்று, 100 மில்லியன் ரூபாய் நட்டஈட்டை செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மைத்திரிபாலவுக்கு உத்தரவிட்டுள்ளது.

தாக்குதல்களுக்கு உள்ளானவர்களுக்காக முன்னிலையான, சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, ஜனாதிபதி பதவியை வகித்துக்கொண்டு எப்படி இவ்வளவு சொத்துக்களை ஜனாதிபதி ஒருவர் குவிக்க முடியும் என வினவினார்.

இந்த தகவல் ஊழலை வெளிப்படுத்துவதாகக் கூறிய அவர், விசாரணைக்கு உத்தரவிடுமாறும் பாதிக்கப்பட்டோர் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.