வெலிகம பிரதேசத்தில் ரஷ்ய பிரஜையை தாக்கிய கடற்தொழிலாளர் கைது

வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பிரஜையை போத்தலால் தாக்கி காயப்படுத்திய கடற்தொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த 32 வயதுடைய ரஷ்ய பிரஜை மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகம நகரிலுள்ள பல்பொருள் அங்காடிக்கு மது போத்தல் ஒன்றை கொள்வனவு செய்ய ரஷ்ய பிரஜை ஒருவர் சென்றுள்ளார்.

இதன்போது அவர் அங்கு வரிசையில் நிற்காமல், அதனை தவிர்த்து மது போத்தல் ஒன்றை கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற கடற்தொழிலாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைதொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரஷ்ய பிரஜை கடற்தொழிலாளரை தாக்கியதாகவும் பின்னர் கடற்தொழிலாளர் போத்தல் ஒன்றினால் ரஷ்ய பிரஜையை தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.