இஸ்லாமிய பெண் பயணியிடம் மன்னிப்புக் கேட்ட அமெரிக்க விமான நிறுவனம் !

e4961dda-4e32-411e-9642-bbbae0a15402_S_secvpf

இஸ்லாமிய பெண் பயணி ஒருவர் விமானப் பயணத்தின் போது மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் இஸ்லாமிய பெண் தஹேரா அகமத், கடந்த வாரம் சிகாகோவிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்தார். பயணத்தின் போது விமானப் பணிப்பெண்ணிடம் டின்னில் அடைக்கப்பட்டிருக்கும் ’டயட் கோக்’  கேட்டுள்ளார். அதற்கு பணிப்பெண் மறுத்தார், ”ஏன் தர முடியாது?” என்ற அவரது கேள்விக்கு பணிப்பெண்ணின் பதில் “ நீங்கள் அதை ஆயுதமாக பயன்படுத்தக்கூடும். அதனால்.” இதைக் கேட்டி தஹேரா அதிர்ச்சிக்குள்ளானார்.

காரணம், அவருக்கு அருகே இருந்த பயணியோ, சற்று முன் அந்த பணிப்பெண் கொடுத்த டின் பியரைத் திறந்து கூலாக குடித்துக் கொண்டிருந்தார். இதைக் சுட்டிக்காட்டி பணிப்பெண்ணிடம் புகார் செய்த தஹேராவை மற்ற பயணிகள் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை கூறி அடக்கினர். வேறு வழியின்றி அமைதியாக தனது பயணத்தை தொடர்ந்தார் தஹேரா.

இந்த சம்பவம் ஊடகங்கள் மூலமாக வெளிச்சத்திற்கு வந்து பொது மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ட்விட்டரில் #UnitedforTahera என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. தஹேராவை அவமதித்தை கண்டித்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை புறக்கணிக்கப் போவதாகவும் பலர் தெரிவித்தனர்.

இந்நிலையில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தஹேராவிடம் மன்னிப்பு கேட்பதாகவும், இந்த சம்பவத்திற்கு காரணமான தங்கள் நிறுவனத்தின் துணை நிறுவனமான ’சியாட்டில் அமெரிக்கா’வின் பணிப்பெண், பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.