முதல் 5 லீக் ஆட்டங்களிலும் அடைந்த தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்தது RCB

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ், 19.3 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்கள் சேர்த்தார். கிரண், தீப்தி சர்மா தலா 22 ரன்கள் அடித்தனர். பெங்களூரு தரப்பில் சிறப்பாக பந்துவீசிய எலிஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. கேப்டன் மந்தனா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

சோபி டிவைன் 14 ரன்கள், எலிஸ் பெர்ரி 10 ரன்கள், ஹீதர் நைட் 24 ரன் என ஆட்டமிழந்தனர். அதன்பின் கனிகா அஹுஜா- ரிச்சா கோஷ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. அதிரடியாக ஆடிய கனிகா 46 ரன்களில் ஆட்டமிழக்க, ரிச்சா கோஷ் தொடர்ந்து ஆடி வெற்றியை உறுதி செய்தார்.

பெங்களூரு அணி 12 பந்துகள் மீதமிருந்த நிலையில், 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் 31 ரன்களுடனும், ஷ்ரேயங்கா பாட்டீல் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த போட்டியில் பெங்களூரு அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். முதல் 5 லீக் ஆட்டங்களிலும் அடைந்த தோல்விக்கு இந்த வெற்றி ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.