நேரத்தை வீணடிக்காமல் மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு வேண்டும் – ராஜித சேனாரத்ன

“நேரத்தை வீணடிக்காமல் மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும்.”

இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

தேர்தலை காரணம் காட்டி அரசியல் தீர்விற்கான சர்வகட்சி பேச்சுவார்த்தைகளை பின்னடிக்காமல் விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துரைத்த அவர்,

“அரசியல் தீர்வு விடயத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உள்ளதுடன், அதிகாரப்பகிர்வு விடயத்தில்தான் ஒவ்வொரு கட்சியினரும் வெவ்வேறு நிலைப்பாட்டில் உள்ளனர்.

அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டங்களில் பங்கேற்றபோது அதை அவதானித்தேன்.

அதிபர் கூறுவது போல் அனைத்து கட்சிகளும் முரண்பாடுகள் இல்லாமல் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும், அப்போதுதான் விரைவில் அரசியல் தீர்வை நோக்கி நகர முடியும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.