பாக். பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் தொகுப்பு

இலங்கையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை  உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும், மறுநாள் புதன்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடனும் இருதரப்பு சந்திப்புகளில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

 

 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது அவர் கலந்துக் கொள்ளவுள்ள நிகழ்வுகள் கீழ்கண்டவாறு அமையப்பெற்றுள்ளன.

எதிர்வரும் செவ்வாய்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை, இராணுவத்தினரின் மரியாதை அணிவகுப்புக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வரவேற்கவுள்ளார். அன்றைய தினம் மாலை ஆறுமணிக்கு அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பு இடம்பெறவுள்துடன், மாலை 6.30 மணியளவில் அலரிமாளிகையில் அமைச்சர்கள் ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மறுநாள் புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷவுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அன்றைய தினம் முற்பகல் 11.30 மணியளவில் சங்கரில்லா ஹோட்டலில் இடம்பெறவுள்ள வணிகம் மற்றும் முதலீடு நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளவுள்ளார். இதன்போது, பிற்பகல் 12.30 மணியளவில் சபாநாயகர் மற்றும் விளையாட்டு அமைச்சரினால் வழங்கப்படவுள்ள விருந்துபசாரத்தில் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், அதன்போது நாவல -கிரிமண்டல மாவத்தையில் உயர்மட்டத்திலான மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார். இவ்வாறு தனது விஜயத்தை மேற்கொண்டுவிட்டு அன்றையதினம் பிற்பகல் 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.

இந்த ஆண்டிற்கான தனது முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முக்கியமாக ஆடை மற்றும் அணிகலன், மருந்துப் பொருட்கள், விவசாய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகனப் பாகங்கள், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், நிர்மானப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போன்ற பிரிவுகளுடன் தொடர்புக்கொண்டுள்ள  உயர்மட்டத்திலான வர்த்தக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவுடன் வருகை தரவுள்ளார்.

இதன்போது, வெளிநாட்டு அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இணைந்து வருகைத்தரவுள்ளமை குறிப்பிடதக்கது.