சுயதனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் – பிரதி பொலிஸ்மா அதிபர்

சுயதனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது சுயதனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் இனங்காணப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

 

இதுத் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் சட்டவிதிகளை முறையாக பின்பற்றுவதில்லை என தெரியவந்துள்ளது. சுயதனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் வெளிபிரதேசங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படாத போதிலும், சிலர் அதற்கு முரணாக வெளிபிரதேசங்களுக்கு செல்வது தெரியவந்துள்ளது. அதனால் இவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக பொலிஸார் சிவில் உடையில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது சட்டவிதிகளுக்கு புறம்பாக வெளிபிரதேசங்களுக்கு செல்லும் நபர்கள் மற்றும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் இல்லங்களுக்கு செல்லும் வெளிநபர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,905 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.