தடுப்பூசியால் மட்டும் கொரோனாவை தடுக்க முடியாது – உலக சுகாதார அமைப்பு

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக, அமெரிக்காவின் ஃபிப்சர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி வைரஸ் பாதிப்பில் இருந்து 90 சதவீதம் திறன் கொண்டது என கடந்த 9-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதேபோல், அமெரிக்காவின் மற்றொரு மருந்து நிறுவனமான மார்டனா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என இன்று அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், தடுப்பூசியால் மட்டும் கொரோனாவை தடுக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெட்ரோஸ் கூறியதாவது:-
“மற்ற கருவிகளை தடுப்பூசி பூர்த்தி செய்யுமே தவிர அவைகளுக்கு மாற்றாக அமையாது. தடுப்பூசியால் மட்டுமே பெருந்தொற்றை (கொரோனா வைரஸ்) முடிவுக்கு கொண்டுவரமுடியாது.
தடுப்பூசி கொரோனா மரணங்களை குறைக்கவும், சுகாதார அமைப்பின் நிலைமையை சமாளிக்கவும் நம்பிக்கையை அளிக்கும். ஆனாலும், தொடர்ந்து வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் ஏற்படுகிறது.
கண்காணிப்பு தொடர்ந்து நீடிக்க வேண்டும். மக்கள் தொடர்ந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். வைரஸ்  பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும். மேலும், தனி மனிதர்கள் தொடர்ந்து கண்காணிப்பிற்கு உள்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.