முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தியதாக கூறுவது சோடிக்கப்பட்ட செய்தியாகும் :ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரி அதிபர்

அப்துல் சலாம் யாசீம்

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் பணி­யாற்றும் ஐந்து முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கும் இரு மாதங்­க­ளுக்கு தற்­கா­லிக இட­மாற்றம் வழங்க கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்­மா­னித்­துள்­ளது. குறித்த முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து பாட­சா­லைக்கு வரு­வ­தற்கு பாட­சாலை சமூ­கத்­தினால் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­படும் நிலையில் இந்த விவ­கா­ரத்­துக்­கான சுமுக தீர்வு மத்­திய கல்வி அமைச்­சினால் வழங்­கப்­படும் வரைக்கும் சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­யை­க­ளுக்கு  தற்­கா­லிக இட­மாற்றம் வழங்­கப்­படும் என கிழக்கு மாகாண மேல­திக கல்வி  பணிப்­பாளர் ஏ.விஜ­யா­னந்­த­மூர்த்தி  தெரி­வித்தார்.

முஸ்­லிம்கள் அச்­சு­றுத்­தி­ய­தாக நான் கூற­வில்லை
இதே­வேளை சம்­பந்­தப்­பட்ட முஸ்லிம் ஆசி­ரி­யை­களோ அல்­லது அவர்­க­ளது கண­வன்­மாரோ என்னை அச்­சு­றுத்­தி­ய­தாக நான் யாரி­டமும் கூற­வில்லை. அவ்­வா­றான சம்­பவம் நடக்­கவும் இல்லை என திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியின் அதிபர் தெரி­வித்தார். இந்த விவ­கா­ரத்தில் எமது நிலைப்­பா­டுகள் வேறு­பட்­ட­தாக இருக்­கின்ற போதிலும் நாங்கள் முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுடன் புரிந்­து­ணர்­வு­ட­னேயே நடந்து கொள்­கிறோம். முஸ்லிம் ஆசி­ரி­யை­களும் எம்முடன் நட்புடனேயே உள்ளனர். என்னை எவரும் அச்சுறுத்தவில்லை. நான் அவ்வாறு யாரிடமும் கூறவுமில்லை. முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தியதாக கூறுவது சோடிக்கப்பட்ட செய்தியாகும் என்றும் அதிபர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா  அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லையின் ஆசி­ரி­யைகள் பெற்றோர் மற்றும் பழைய மாண­வர்கள் நேற்று முன்­தினம் பாட­சா­லைக்கு முன்­பாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இத­னை­ய­டுத்து இந்த விவ­காரம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்றுக் காலை திரு­கோ­ண­மலை வலயக் கல்வி அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது.

இதன்­போது பாரம்­ப­ரி­ய­மாக இந்துக் கலா­சா­ரத்தைப் பின்­பற்றி வரும் தமது பாட­சா­லையில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா எனும் முழு நீள ஆடை அணிந்து வரு­வ­தா­னது தமது கலா­சா­ரத்­தையும் பாட­சா­லையின் விதி­மு­றை­க­ளையும் மீறு­வ­தா­கவும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் சாரி அணிந்தே  பாட­சா­லைக்கு சமு­க­ம­ளிக்க வேண்டும் என்றும் பாட­சாலை தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டது.  இந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து தம்மால் மாற முடி­யாது எனவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

எனினும், பாட­சாலை தரப்பின் நிபந்­த­னையை ஏற்க மறுத்த குறித்த முஸ்லிம் ஆசி­ரி­யை­களும் இக் கூட்­டத்தில் பங்­கேற்ற முஸ்லிம் தரப்­பி­னரும் இஸ்­லா­மிய வரை­ய­றை­களைப் பேணும் வகை­யி­லான அபாயா ஆடையை கைவிட முடி­யாது என உறு­தி­படத் தெரி­வித்­தனர். அத்­துடன் கல்­வி­ய­மைச்­சா­னது, ஆசி­ரி­யைகள் பாட­சா­லைக்கு அபாயா ஆடை அணிந்து சமு­க­ம­ளிக்க முடி­யாது என சட்ட ரீதி­யாக உத்­த­ர­வி­டும்­பட்­சத்தில் அது தொடர்பில் தம்மால் பரி­சீ­லிக்க முடியும் எனவும் அது­வல்­லாத சட்ட வலு­வற்ற நிபந்­த­னை­க­ளுக்கு தம்மால் கட்­டுப்­பட முடி­யாது எனவும் சுட்­டிக்­காட்­டினர். முஸ்லிம் ஆசி­ரி­யைகள் தமது கலா­சார ஆடை­யான அபா­யா­வி­னையே அணி­வார்கள். எனினும் கறுப்பு அபாயா வேண்டாம் எனில் வேறு நிறங்­க­ளி­னா­லான அபா­யா­வினை அணியத் தயா­ரா­க­வுள்­ளனர் என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இரு தரப்­பி­னரும் தமது நிலைப்­பா­டு­களில் உறு­தி­யா­க­வி­ருந்த நிலையில் இந்த விவ­காரம் மேலும் பூதா­க­ர­மாக்­கப்­பட்டு இனங்­க­ளி­டையே முரண்­பா­டுகள் மேலெ­ழு­வதைத் தவிர்க்கும் வகையில் தற்­கா­லிகத் தீர்வு காண மாகாண கல்­வித்­தி­ணைக்­களம் தீர்­மா­னித்­தது. இதற்­க­மைய இந்த விவ­காரம் தொடர்பில் மத்­திய கல்வி அமைச்சின் ஆலோ­ச­னையைப் பெறும் வரை எதிர்­வரும் மே 1 ஆம் திகதி முதல் சம்­பந்­தப்­பட்ட 5 ஆசி­ரி­யை­க­ளுக்கும் அவர்கள் கோரு­கின்ற பாட­சா­லை­க­ளுக்கு தற்­கா­லிக இட­மாற்றம் வழங்­கு­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அத்­துடன் இரு மாதங்­களின் பின்னர் இவ் ஆசி­ரி­யை­க­ளுக்கு கல்வி அமைச்சின் அனு­ம­தி­யுடன் நிரந்­தர இட­மாற்றம் வழங்­கு­வ­தெ­னவும் இணக்கம் காணப்­பட்­டது.

இன நல்லுறவைப் பேணுமாறு வலியுறுத்து
இதேவேளை இக்கலந்துரையாடலின் போது திருகோணமலை மாவட்டத்தில் வாழ்கின்ற சமூகங்கள் பிறரது மத கலாசாரங்களை மதித்து ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.