யுனெஸ்கோ நிறுவனத்தால் கல்வி அமைச்சுக்கென வழங்கப்பட்ட தொகையில் 87.45 வீதமான தொகை மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ?

 

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்காக பல நிறுவனங்கள் பண உதவி வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு யுனெஸ்கோ நிறுவனத்தால் கல்வி அமைச்சுக்கென வழங்கப்பட்ட தொகையில் 87.45 வீதமான தொகை பயன்படுத்தப்படாமல் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இன்று விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

2015 ஆம் ஆண்டு ஜீலை 20 ஆம் திகதி பாடசாலைகளில் அமைப்பினை முன்னேற்றுவதற்காக யுனெஸ்கோ அமைப்பினால் கல்வி அமைச்சுக்கு 61,945 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு வழங்கப்பட்ட அமெரிக்க டொலரில் 87.45 வீதமான தொகை மீண்டும் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை கணக்காய்வுகளின் போது தெரியவந்துள்ளது. 

குறிப்பிட்ட அத்தொகையில் 12 இலட்சம் ரூபாவானது சுற்றுசூழலில் காபன் பெரும் முக்கியதுவத்தினை பரிசோதிப்பதற்காகவே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட அச்செயற்த்திட்டம் இடம்பெறவில்லை. 

பாடசாலையில் இடம்பெரும் பல்வேறு செயற்திட்டங்களுக்கான பணம் மாணவர்களின் பெற்றோர்களிடமே அறவிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விசேட நிறுவனங்களால் வழங்கப்படும் தொகையை மீண்டும் திருப்பி அனுப்புவது தேசிய குற்றமாகும். இவ்வாறு பெற்றுத்தரும் பணம் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதை மையமாக கொண்டே அடுத்த நிதி உதிவிகள் வழங்குவது தீர்மானிக்கப்படும் என்றார்.