அமைச்சர் பதவிகளை கைவிட முடியாதவர்கள் என் மீது குற்றம் சுமத்துவதில் பயனில்லை : நாமல்

கூட்டு எதிர்க்கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதை தாம் தனிப்பட்ட ரீதியில் விரும்பவில்லை என்ற போதிலும் அது தமது அணிக்குள் பெரிய நிலைப்பாடு அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 நீதிமன்ற பணி ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.நான் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், பெரிய அழுத்தங்களை கொடுக்கும் எந்த விடயம் சம்பந்தமாகவும் என்னால் கருத்துக்களை முன்வைக்க முடியாது.
 தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அனைவரும் அவற்றை கைவிட்டு கூட்டு எதிர்க்கட்சியுடன் இணையுமாறு கோரப்பட்டது. அவர்கள் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. அமைச்சர் பதவிகளை கைவிட முடியாதவர்கள் என் மீது குற்றம் சுமத்துவதில் பயனில்லை.
 நான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க போவதில்லை. அமைச்சர் தயாசிறி ஜயசேகர என் மீது குற்றம் சுமத்துவதற்கு பதிலாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்த வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.