பலஸ்தீனுக்கு இலங்கை ஆதரவு ,ஜெருசலம் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பை இலங்கை ஏற்றுக்கொள்ளாது : ராஜித

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதை இலங்கை ஏற்றுகொள்ளாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
 
 
 அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்றயை தினம்(13) அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெருசலத்திற்கு நாங்கள் போகமாட்டோம். எமது இலங்கைக்கான தூதரகம் ரெல் அவி நகரத்தில் மாத்திரமே அமைந்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் இஸ்ரேல் தலைநகர அறிவிப்பு குறித்து இலங்கை தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை மேற்குலக நாடுகளும் ஏற்று கொள்ளவில்லை என்று தெரிவித்த அமைச்சர், பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை சர்வ கட்சிகளின் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் இந்த கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு புதிய நகர மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.