பொத்துவிலையும் அட்டாளைச்சேனையையும் தலாக் செய்த பைசல் காசிம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு (10) சுமார் 12.00 மணிவரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது, வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலேயே அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பொத்துவில் அமைப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எம். எஸ்.வாஸித் துணிச்சலுடன் சில கருத்துகளை முன்வைத்திருந்தார். இதனால் கூட்டத்தில் சிறியதொரு சலசலப்பு ஏற்பட்டது.

“ பொத்துவிலில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக எம்.பிக்களும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களும் பொத்துவிலுக்கும் செல்ல வேண்டும்” என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்கு தெரிவித்துள்ளார்.

அதன் போது எழுந்த எம். எஸ்.வாஸித் “எங்களது ஊருக்கு எம்பியும் இல்லை, மாகாண சபை உறுப்பினரும் இல்லை. இந்த நிலையில், அவரவர் ஊருக்கு அந்தந்த எம்பிக்களும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் ஆட்களைப் போடும் நிலையில், பொத்துவிலுக்கு நான் அமைப்பாளராக இருக்கும் போது ஏன் இங்கு ஆட்களை அனுப்ப வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது எழுந்த பிரதியமைச்சர் பைசல் காசிம், பொத்துவிலுக்கு தான் வரப் போதில்லை எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளர் எம். எஸ்.வாஸிதை நான் தொடர்பு கொண்டு கேட்ட போது, சம்பவத்தை உறுதிப்படுத்திய அவர்,

“எலக்க்ஷனுக்கு லீடர் வந்தால் போதும் எம்பிக்களோ மற்றவர்களோ வரத் தேவையில்லை. நான் பொத்துவில் பிரதேச சபையை வென்று தருவேன் என உயர்பீடக் கூட்டத்தில் தெரிவித்தேன்”. என்று கூறினார்.

இதன்போதே பிரதியமைச்சர் பைசல் காசிம் எழுந்து, தான் அட்டாளைச்சேனைக்கும் பொத்துவிலுக்கும் செல்லமாட்டேன் எனத் தெரிவித்தார் என்றும் வாஸித் என்னிடம் கூறினார்.

”அடுத்த எலக்க்ஷனுக்காக ஒவ்வொருவரும் இப்போதிருந்தே புரோக்கர் போடுகின்றனர். அந்த புரோக்கர்கள் எங்களுக்குச் சரிவராது. எங்களது ஊரை (பொத்துவில்) நாங்கள் ஆளும் சக்தி எங்களுக்கு வேண்டும். இல்லாவிடின் நான் ஏன் அமைப்பாளராக இருக்க வேண்டும் எனவும் வாஸித் என்னிடம் கேள்வியெழுப்பினார்.

இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஒலுவிலில் நடந்த கட்சியின் கூட்டம் ஒன்றில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம். முனாஸும் இவ்வாறானதொரு பிரச்சினையை எழுப்பியிருந்தார்.

“அட்டாளைச்சேனைக்கு வேட்பாளர்களைப் போடுவதற்கு வெளியிலிருந்து எம்.பியும் தேவை இல்லை (பைசல் காசிம்) தம்பியும் (தவம்) தேவையில்லை. எங்களது ஊரில் உள்ள கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் ஆகியோர் வேட்பாளர்களைத் தெரிவு செய்வர் என காரசாரமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்