எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பிரதமர் மோடியிடம் உதவி தேடிய ஜனாதிபதி

 எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரசாங்கம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பெருந்தொகையான எரிபொருளை அனுப்புவதற்கு மோடி இணக்கம் வெளியிட்டுள்ளார். 

 இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இந்தியாவினால் முடியுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குமென இந்திய பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

 அத்துடன், இலங்கை நோக்கி வரும் எண்ணெய் தாங்கிய கப்பலுக்கு மேலதிகமாக எண்ணெய் தேவைப்படுமாயின் அதனை வழங்குவதற்கு இந்தியா தயார் எனவும் இதன்போது இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் தன் வசமிருக்கும் சுமார் 3 ஆயிரத்து 500 கிலோ லீற்றர் ( 1 கிலோ லீற்றர் 1000 லீற்றர்) எரிபொருளை உடனடியாக விநியோகத்துக்குக் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.