‘வசிப்பதற்கு ஒரு  வீடு வாழ்வதற்கு ஒரு தொழில்’ எனும் திட்டத்திற்கமைய வீடுகள் கையளிப்பு

​A.R.A.RAHEEM

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரையின்  கீழ் 50 வீடுகள் முசலி பிரதேச சபைக்குட்பட்ட  அகத்திமுறிப்பு அளக்கட்டு  கிராமத்திற்கு  வழங்கி வைக்கப்பட்டுள்ளது 

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் “வசிப்பதற்கு ஒரு  வீடு வாழ்வதற்கு ஒரு தொழில்” என்னும் திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யுத்த நிறைவின் பின்னர் தமது சொந்த கிராமங்களுக்கு மீள்  குடியேறிவரும் மக்களை அழகான முறையில் குடியமர்த்த வேண்டும் என்பதற்காக இவ் வீடுகள் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது. 

வீடுகள் வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றிய றிப்கான் பதியுதீன் ”  உங்களுக்கு தெரியும் ஒரு வீடு கட்டுவது என்றால் நாங்கள் எவ்வளவு சிரமப்பட்டு பல வருடங்கள் பணத்தை சேமித்து பாரிய ஒரு துன்பத்திற்கு மத்தியில் கட்டி முடிப்போம் என்று; ஆனால் உங்களுக்கு அந்த கஷ்டங்கள் எதையும் நாங்கள் கொடுக்கவில்லை. வீடுகளை அழகான முறையில் கட்டித்தந்தது உங்கள் கைகளில் சாவியினை மாத்திரம் தருகிறோம் காரணம் நீங்கள் மீள்குடியேறி நிம்மதியான ஒரு வாழ்க்கையினை வாழ வேண்டும் என்ற அமைச்சரினதும் என்னுடையதும் ஏனைய உறுப்பினர்களின் ஆசைதான். உங்களுக்கு தெரியும் அமைச்சர் இன்று பல துன்பங்களை மக்களுக்காக அனுபவித்து வருகிறார் என்று. ஆனால் எமது தேசியத்தலைவர் தான் எந்தளவு கஷ்டங்களை அவமானங்களை அனுபவித்தாலும் நமது முஸ்லீம் சமூகம் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று இவ்வாறான சேவைகளை செய்து வருகின்றார். எனவே உங்களுக்கு கிடைத்த வீடுகளை அழகான முறையில் பராமரித்து நல்ல ஸாலிஹான  முறையில் நீங்கள் வாழவேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்  இதுதான் அமைச்சர் உங்களிடம் எதிர்பார்ப்பது அதேபோன்று உங்கள் கிராமத்திற்கு அழகான சிறந்த பாடசாலையினை அமைத்து தந்திருக்கின்றார் அழகான கட்டிடங்கள் கட்டப்படுகின்றன மேலும் பல வசதிகள் செய்ய தயாராக இருக்கின்றார் எனவே நீங்கள் அமைச்சருக்கும் அவருடைய கட்சிக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் ”  என தெரிவித்தார். 

மேலும் இந்நிகழ்விற்கு அமைச்சரின் இணைப்பாளர்களான முஜாஹிர் மற்றும் அலிகான் ஷரீப் அவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது