புதிய மீயுயர் அடிப்படைச் சட்டத்தின் மீது ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் : சம்பந்தன்

 

பிரதம மந்திரியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலும் அதனோடு சேர்த்து முன்வைக்கப்பட்டுள்ள இணைப்புக்களிலும் அடங்கியுள்ள விடயங்கள் பற்றிய கருத்துக்களைத் தற்பொழுது கூறுவது தனது எண்ணமல்ல என்று எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

 

அத்தகைய நோக்கத்துக்காக அரசியலமைப்புச் சபையின் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள கூட்டங்களில் அந்த விடயங்கள் ஆராயப்படவுள்ளன. 

நாங்கள் ஈடுபட்டுள்ள செயல்முறையின் சில விடயங்களின் அவசரமான தொடர்பு மற்றும் முக்கியத்துவம் பற்றியே குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன். 

சனநாயக சோசலிசக் குடியரசாகிய எமது நாட்டிற்கான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் செயல்முறையிலேயே நாம் அனைவரும் ஈடுபட்டுள்ளோம். 

அடிப்படை மீயுயர் சட்டமாகிய இலங்கையின் அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் சார்பாக இலங்கைப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் ஈடுபட்டுள்ளோம். 

பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கை என்ற உறுதியான கட்டமைப்புக்கமைவாக இது மேற்கொள்ளப்படுகின்றது.  

இந்தக் கட்டமைப்பின்படியே நாங்கள் யாவரும் சுயமாக விரும்பி ஒப்புக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் கூடிய வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்படும்.  

நியாயமான, ஏற்புடையதான, போதியளவான தேசிய ஒருங்கிசைவின் அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியலமைப்புச் செயற்பாடுகள் வெற்றிகரமாக முடிவுறும்போது அது இந்தப் பிரச்சினைக்கான உறுதியான முடிவைக் கொண்டுவரும். 

நாட்டின் மீயுயர் சட்டத்தின் அடிப்படையிலும், அதன் மக்களுடைய சுயவிருப்பத்துடனும், சம்மதத்துடனும் இலங்கை ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாததாகத் தொடர்ந்தும் இருக்கும். 

வித்தியாசமான அடையாளங்களைக் கொண்டுள்ள வேறுபட்ட மக்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் போன்றோர் வாழுகின்ற நாடாக இலங்கை உள்ளது. அத்துடன் இலங்கை பல்வேறு அரசியற் கட்சிகள் செயற்படுகின்ற ஜனநாயகம் தொழிற்படுகின்ற நாடாகும்.  

இரண்டு பிரதான அரசியற் கட்சிகளும் மாறிமாறி இந்த நாட்டின் அரசாங்கத்தை அமைத்து ஆட்சி செய்திருக்கும் அதேவேளை, ஏனைய கட்சிகளும் தங்களுடைய வகிபாகத்தைக் கொண்டிருந்தன.

இலங்கையில் இதுவரை கட்டமைக்கப்பட்ட அரசியலமைப்புக்கள் எதுவும் அதன் வேறுபட்ட மக்களின், குறிப்பாகத் தமிழ் மக்களின் இருதரப்பு ஒருங்கிசைவைப் பெற்றிருக்கவில்லை அல்லது இரு பிரதான கட்சிகளின் மற்றும் ஏனைய அரசியற் கட்சிகளின் இருதரப்பு ஒருங்சிசைவையும் பெற்றிருக்கவில்லை.  

அரசியலமைப்பு உருவாக்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அதற்கான ஒரு வாய்ப்பை முதற் தடவையாகத் தந்துள்ளன.  

அத்தகைய நியாயமான ஒருங்கிசைவின் அடிப்படையிலான அரசியலமைப்பொன்றே நாட்டின் அடிப்படையான மீயுயர் சட்டமாக நாட்டின் அரசியலமைப்புக்கு அவசியமாகத் தேவையாகவுள்ள சட்ட ரீதியான அந்தஸ்தையும் நம்பகத் தன்மையையும் பெற்றுத் தரும். 

இதுவே, அரசியலமைப்பை அரசியல் சூழ்நிலைகளின் பிடிக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து, இலங்கையை ஒரு தேசமாகவும் இலங்கையர் என்ற அடையாளத்தையும் காட்டும் பண்புகளை உருவாக்கக் கூடிய அரசியலமைப்பு ஒன்றைப் பெற்றுத் தரும். 

இலங்கை சுதந்திரம் அடைந்த எழுபது ஆண்டுகளாக இந்த நிலைமையை அடைய எம்மால் முடியவில்லை. 

1987 – 1988 ஆண்டு தொடக்கம் அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் தொடர்கின்றன.  

செயல்வலு குறைந்ததாக இருந்தபோதும், அரசியலமைப்புக்கான 13 வது திருத்தமே மத்திக்கும் மாகாணங்களுக்கு இடையிலான அதிகாரப் பங்கீட்டை முதற் தடவையாக அரசியலமைப்புக்குள் உள்ளடக்கியது. 

அப்பொழுது தொடக்கம் பின்வந்த ஜனாதிபதிகளும் அரசாங்கங்களும் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வைக் காண்பதற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய முன்னேற்றகரமான பிரேரணைகளை முன்வைத்தனர்.  

ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் மங்கள முனசிங்க தெரிவுக்குழுவின் பிரேரணைகள் வந்தன் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையின் அனுமதியுடன் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசியலமைப்புப் பிரேரணைகள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அவரால் நியமிக்கப்பட்ட பல்லின நிபுணர்களின் பிரேரணைகள் உருவாக்கப்பட்டதோடு, பேராசிரியர் திஸ்ஸ விதாரணவை தலைவராகக் கொண்ட சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு அதன் அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்திருந்தது. 

இப்போதைக்கு அவை பற்றிய விபரங்களுக்குள் நான் போகவில்லை. அத்தகைய பிரேரணைகள் பல்வேறு புறம்பான காரணங்களுக்காக அரசியலமைப்புடன் சேர்க்கப்படாவிட்டாலும் அப்பிரேரணைகள் தொடர்பாகக் கணிசமான ஒருங்கிசைவு காணப்பட்டதென்பதைத் தெரிவிப்பது போதுமானதென எண்ணுகிறேன்.  

உண்மையில் இது முன்னைய செயற்பாடுகளின் தொடர்ச்சி எனக் குறிப்பிட்டுக் கூறுவதோடு, இந்தச் செயற்பாடு முழுமையாக வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் இடம்பெறுவதனால், இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடக் கூடாதென எல்லோரும் நியாயமாகவும் உறுதியுடனும் இருந்தால் இது வெற்றியடையக் கூடிய எல்லாச் சாதகமான நிலைமைகளும் உள்ளன.  

தமது அடையாளமும், கௌரவமும் அங்கீகரிக்கப்படும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுமான அரசியலமைப்பு ஏற்பாடுகளே தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அபிலாஷையாக இருந்து வருகின்றது. 

உலகத்தில் பரவலாக இத்தகைய ஒழுங்கு முறைகள் இருக்கின்றன. தீர்வு காணப்படாத நிலைமைகளின் விளைவாக முழு நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன.  

கல்வியறிவுடைய தகுதிவாய்ந்த இந்த நாட்டின் பிரசைகள், குறிப்பாகத் தமிழர்களும் சிங்களவர்களும் நாட்டைவிட்டு வெளியேறி பிற நாடுகளில் புகலிடம் பெற்றுள்ளதனால் இந்த நாடு திறமையானவர்களைப் பாரிய அளவில் இழந்துள்ளது. 

பல்வேறு வழிகளிலும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. 

நாங்கள் எமது நாட்டின் நற்பெயரை மீட்டெடுத்து சர்வதேசத்தின் மதிப்பைப் பெறவேண்டிய தேவை உள்ளது. 

எமது பொருளாதாரம் பாரிய அளவில் குறைபாடுடையதாக உள்ளதோடு, முன்னர் எமது வாழ்க்கைத் தரத்தை விடப் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தப் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் வேகமாக முன்னேற்றமடைந்து இன்று நாம் வாழும் வாழ்க்கைத் தரத்தைவிட மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டவர்களாக இருப்பதால் பொருளாதார ரீதியில் நாம் மிகவும் பின்னடைந்துள்ளோம்.  

பாதுகாப்புச் செலவினங்களுக்காக பாரிய தொகையைச் செலவிட வேண்டியுள்ளதால் முக்கியமான துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வளப் பற்றாக்குறை தடையாக உள்ளமை பின்னடைவுக்குக் காரணமாகின்றது. 

இத்தகைய காரணிகளே புதிய மீயுயர் அடிப்படைச் சட்டத்தின் மீது ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.  

இந்தப் பணியை வெற்றிகரமாகப் பூரணப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்