அகதிகள் பிரச்சினையில் அமெரிக்காவிடமிருந்து எந்தவித உதவியையும் எதிர்பார்க்கவில்லை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்த கூட்டத்தில் பங்கேற்க அவர், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். 
இந்த சந்திப்பிற்கு பின்னர் ஹசினா செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது “வங்காளதேசம் எப்படி இருக்கிறது?”, என டிரம்ப் கேட்டதாகவும் அதற்கு “நாடு நன்றாக இருக்கிறது, ஆனால் ரோஹிங்கியா அகதிகள் விவகாரம் மட்டுமே பிரச்சனையாக உள்ளது”, என பதிலளித்ததாகவும் கூறினார். ஆனால் இது குறித்து அவர் எந்தவித கருத்து தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அகதிகள் பிரச்சனையில் அமெரிக்காவிடமிருந்து எந்தவித உதவியையும் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா ஏற்கனவே அகதிகளை அனுமதிக்க மாட்டோம் என கூறிவிட்டது. அதன்பின்னர் அமெரிக்காவிடம் குறிப்பாக அதிபரிடம் எந்த உதவியை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் ஏற்கனவே தங்கள் முடிவை எடுத்து விட்டார்கள். வங்காளதேசம் பணக்கார நாடு. ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு உணவளித்து வருகிறோம், கூடுதலாக 4 லட்சம் பேருக்கு உணவளிப்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை”, என கூறினார்.