சுமந்திரன் கொலை முயற்சி – சந்தேக நபர்களுக்கு பிணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல யாழ்.நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த  5 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு தொடர்பில் அறிக்கைகள் எதுவும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான நீதவான் பிள்ளைநாதன் அச்சுனா மன்றில் தெரிவித்தவேளையில், இதற்கு அரச சட்டவாதி நாகரட்னம் நிஷாந் விசாரணைகள் இன்னும் முடியவில்லை எனவும், பிணை வழங்கினால் சந்தேகநபர்கள் நாட்டை விட்டு தப்பி செல்ல வாய்ப்புள்ளதாக மன்றில் தெரிவித்தார்.

இருவரின் வாதங்களின் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின், இலங்கை அரசியல் சட்டத்திற்கு அமைய குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் வரையில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சந்தேகநபர்களாகவே கருதப்படுவதோடு, முன்னாள் போராளிகளை தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பது அவர்களின் நடமாடும் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் என்பதில் கருத்தில் கொண்டு சந்தேகநபர்கள் ஐவருக்கும் நிபந்தனை அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதியளித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவிட்டார்.