உள்ளுராட்சிசபை சாய்ந்தமருது மக்களின் உரிமை :-வை.எம்.ஹனிபா ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்

 

எம்.வை.அமீர்  –

கடந்த 1987 ஆம் ஆண்டு கரைவாகு தெற்கு கிராமாட்சி மன்றாமாக இருந்த சாய்ந்தமருது, இம்மக்களின் மக்களின் எவ்வித அங்கீகாரமுமின்றி இரவோடிவராக இணைக்கப்பட்டதன் விளைவே இன்று ஏற்பட்ட நிலை என்று சாய்ந்தமருது  மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.

சாய்ந்தமருதுக்கான  தனியான உள்ளுராட்சிசபையை பிரகடனப்படுத்தப்படுவதற்கான  இறுதிக்கட்ட முஸ்தீபுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இப்போதைய சூழலில் தனியான உள்ளுராட்சிசபை என்ற  இம்மக்களின் நியாயமான உரிமையை மழுங்கடிக்கும் விதத்தில் சாய்ந்தமருது மக்களின் உரிமையை மறுக்கும் விதத்தில் முகநூல்கள் ஊடாகவும் ஏனைய சில ஊடகங்களிலும் வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளுக்கு பதில் வழங்குவதுடன் இவைகளை தெளிவுபடுத்தும் பொருட்டு எதிர்வரும் 2017-08-25 ஆம் திகதி பள்ளிவாசல் சார்பாக வெளியிடப்படவுள்ள உத்தியோகபூர்வ துண்டுப்பிரசுரங்களை ஊடகவியலாளர்களுக்கு வழங்கும் நிகழ்வும் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் 2017-08-21 ஆம் திகதி பள்ளிவாசலின் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தககூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் உள்ளிட்ட ஊர்ப்பிரமுகர்களும் பள்ளிவாசலின் மரைக்காயர் சபையினரும் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த கலாநிதி ஜெமில், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை தொடர்பான கோரிக்கைகள் ஆரம்பத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசால் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் காலப்போக்கில் இம்மக்களின் கோரிக்கையை அந்த கட்சி கிடப்பில் போட்டிருந்ததால் அதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னெடுத்ததாகவும் அதன்பயனாக சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை மிக விரைவில் மலரவுள்ளதாகவும் அமைச்சர் றிஷாத் பதுதியுதீன் தலைமையில் தான் பலமுறை அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து அழுத்தங்களைக் கொடுத்ததன் பயனாகவே இன்றைய சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைக்கு இதற்கு பலர் உரிமைகோர முற்படுவதாகவும் எது எப்படியானாலும் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நிறைவேறினால் போதும் என்றும் தெரிவித்தார்.

வை.எம்.ஹனிபா கருத்துத் தெரிவித்தபோது, நாங்கள் எந்த ஊர்களினதோ மக்களினதோ அபிலாஷைகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் எங்களது மக்களின் நியாயமான உரிமையையே கோரிநிற்பதாகவும் அதற்கு தயவுசெய்து யாரும் இடையில் நிற்க வேண்டாம் என்றும் இம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிகளும் மிகுந்த பிராயத்தனங்களை எடுத்ததாகவும் அவர்களையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டுவதாகவும் இது கூட்டு முயற்சி ஒன்றின் ஊடாகவே சாத்தியப்படவுள்ளதாகவும் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை கொச்சைப்படுத்தும் விதத்தில் வெளிவரும் அநாமோதய சுவரொட்டிகள் துண்டுப்பிரசுரங்கள் செய்திகளுக்கு பள்ளிவாசல் பொறுப்பல்ல என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று வெளிவரவுள்ள துண்டுப்பிரசுரத்தின் நகலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

அன்பார்ந்த உடன் பிறப்புக்களே, அன்புடையீர; அஸ்ஸலாமு அலைக்கும்

வரலாற்றுத் தவறொன்றின் மூலம் சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகள் விருப்பு வெறுப்புக்கு அப்பால்; இணைத்து கல்முனை மாநகரசபை உருவாக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக முழுகல்முனை தொகுதியையும் ஆளுகைக்கு உட்படுத்தியுள்ளது அது போன்று மற்றுமொரு வரலாற்றுத் தவறொன்றை ஏற்படுத்தாமல் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு மட்டும் வரையறை செய்து ஒரு சபையை ஏற்படுத்த இருப்பது தாங்கள் அறிந்ததே,

இதற்குமாறாக ஒருசிலர் கடந்த காலங்களில் முன்னாள் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் அவர்களால் நான்கு சபைகளாக பிரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை முறியடித்து இன்று அதனைதாருங்கள் என்று கேட்பவர்கள் இச்சபையானது பல்வேறு நன்மைகளை சமூகரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் ஏற்படுத்தினாலும் கல்முனையின் வீழ்ச்சிக்கு அடிகோலும் என்ற அச்சத்தை  மக்கள் மத்தியில் விதைக்க முற்படுகின்றனர்

மறைந்த தலைவர் மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்கள் உட்பட சகல முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களும் சாய்ந்தமருது பிரதேச மக்களின் கோரிக்கையான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பவற்றை பெற்றுக்கொடுக்க பின்னிற்கவில்லை. குறிப்பாக பிரதேச செயலகத்தை உருவாக்கியபோது சாய்ந்தமருதின் வடக்கு எல்லை குறைக்கப்பட்டது இந்த குறைக்கப்பட்ட எல்லையோடுதான் பிரதேச செயலகத்தின் எல்லை வரையறுக்கப்பட்டது. இதன் போது நாங்கள் கொதித்தெழவில்லை எமது பெருந்தன்மையான விட்டுக்கொடுப்புக்கு சிறந்த உதாரணமாகும்.

எமது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி மன்றம் வழங்கப்படுவதன் மூலம் எந்தவொரு பிரதேசமோ, இனமோ குறிப்பாக  கல்முனை மாநகரமோ பாதிக்கப்படமாட்டாது என்று உறுதியாகவும்,அறிவு பூர்வமாகவும் அறிந்திருந்தும் கூட இவர்கள் இவற்றைத் திரிபுபடுத்தி உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்தையும், தடுத்து நிறுத்துவதற்கான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வது இவ்வூரின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிருப்தியையும் ஆழ்ந்த மனவேதனையையும்  ஏற்படுத்தும் ஒரு செயலாகும்.

எமது சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் மரைக்காயர்சபை சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளுராட்சி சபைக்குரிய முறையான விண்ணப்பத்தை இந்தப்பிரதேசத்தில் பெரும்பாண்மை வாக்குப்பலத்தைப் பெற்ற கட்சியின் தலைவர் ஊடாக எமது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர;,மாநகர சபையின் உறுப்பினர;கள், கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்ட குழுவினர் அப்போதைய உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சராகவிருந்த தற்போதைய சபாநாயகர; கௌரவ கரு ஜயசூரிய  அவர்களிடம் கையளித்தது மட்டுமல்லாது அதற்கான பிரதேச,மாவட்ட செயலாளரின் சிபாரிசுகளையும் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

அத்துடன் எமது முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தீர்மானமாக எடுக்கப்பட்டு கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக கடந்த பொதுத்தேர்தலின்போது  ஸ்ரீ.ல.மு.கா இன் தலைவர் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஆகியோர் தலைமையில் கல்முனையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சார கூட்டத்தில் இந்த சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை தருவதாக தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டது. மேலும் கௌரவ அ.இ.ம.கா கட்சியின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் தற்போதைய மாகாண உள்ளுராட்சி அமைச்சர் அவர்களை விசேடமாக அழைத்து வரப்பட்டு சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை வழங்குவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பிரகடனமும் செய்யப்பட உள்ள இவ்வாறன நிலையில் சுமார் 30,000 மக்களை கொண்டதும் 20,000 க்கு மேற்பட்ட வாக்காளர்களை கொண்டதுமான ஒரு பிரதேசத்திற்கான சமூக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடிய ஒரு தனியான உள்ளுராட்சி வழங்கப்படவுள்ள இச் சந்தர்ப்பத்தில் குறுகிய நோக்கங்களுடன் தடுக்க முனைவது அல்லது அதற்கான முட்டுக்கட்டை போட நினைப்பது இப்பிரதேச மக்களின்; அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற அல்லது இல்லாமல் செய்கின்ற செயற்பாடவே கருத முடியும்.

எனவே இவ்வாறன எதிர் செயற்பாட்டாளர்கள் உடனடியாக தங்களை திருத்திக் கொண்டு யதார்த்தத்தின் பக்கம் திரும்புவது சிறந்தது. ஆதனால் பின் விளைவுகளையும் தாக்கங்களையும் ஒரு கணம் சிந்தித்து இவ்வூர் மக்களின் அபிலாசைகள், விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளித்து எதிர்வரும் காலங்களில் மலரவிருக்கின்ற இவ் உள்ளுராட்சி சபையை மலர ஒன்றிணைவோம்.

எமது நோக்கம் கல்முனையின் அபிவிருத்தி, சாய்ந்தமருதின் அபிவிருத்தி, ஒட்டு மொத்த கல்முனை தொகுதியின் அபிவிருத்தி மற்றும் பிரதேச ஓற்றுமையுமே.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.