டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கழிவு முகாமைத்துவ திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் : ஜனாதிபதி

கழிவுப் பிரச்சினைக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கழிவு முகாமைத்துவ திட்டங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் கழிவு முகாமைத்துவம் பாடசாலைகளில் பொலித்தீன் பயன்பாடு பொலித்தீன் பிளாஸ்டிக் பயன்பாட்டை வரையறுத்தல் போன்றன தொடர்பில் அமைச்சரவையின் பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது தொடர்பிலும் ஜனாதிபதி இதன் போது அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

கழிவகற்றல் நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளன.