மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் ஒரு போதும் ஊடகத் துறையை அழித்து விடமுடியாது: கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்

 எம்.ஜே.எம்.சஜீத்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இயங்கி வந்த இணையத்தள ஊடக அலுவலகம் மீது இனந்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அம்பாறை மாவட்ட ஊடகவியாளர் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது என சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அவர் இன்று(11) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கருகாமையில் இயங்கி வந்த சிலோன் முஸ்லிம் ஊடக அலுவலகம் மீது இன்று(11) அதிகாலையில் கழிவொயில் வீசப்பட்டு ஜன்னல் கண்ணாடி, கதவு மற்றும் பெயர்ப் பலகை என்பன சேதமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மிலேச்சத்தனமானதும், கோளைத்தனமானதுமான தாக்குதல்கள் மூலம் ஒரு போதும் ஊடகத் துறையை அழித்து விடமுடியாது என்பதுடன் இவ்வாறான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் ஊடக நிறுவனங்கள் மீதும், ஊடகவியாலளர்கள் மீது கட்டவிழ்து விடப்பட்டிருந்த வன்முறைகளும், அச்சுறுத்தல்களும் மீண்டும் தொடராத வண்ணம் இந்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.