பொம்மையாட்சி தவறுகளை மறைக்கவே எமது ஆட்சிக்கால ஊழல் விசாரணை நாடகம் அரங்கேறுகிறது :நாமல்

 

கடந்த கால ஊழல்கள் பற்றிய  விசாரணைகள் தொடர்பில் விமர்சனம் முன்வைக்கும் ராஜித சேனாரத்ன அவர் மீதுமேற்கொள்ளப்பட்ட  ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படாமல் உள்ளது தொடர்பில் மௌனமாக இருப்பது வேடிக்கையான விடயம் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளிட்ட அவர்..

ஊழல் மோசடி விசாரணைகள் தொடர்பில் ராஜித சேனாரத்ன கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். நாமும் அதேவிடயத்தை தான் தொடர்ச்சியாக கூறுகிறோம். ஊழல் விசாரணைகள் ஒரு பக்கசார்பாகவே இடம்பெறுகின்றன. கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆதாரமற்ற  முறைப்பாடுகளுக்கு எதிராக மட்டுமே விசாரணைகளை முன்னெடுக்கிறார்கள்.

இந்த அரசாங்கத்தில் மத்திய வங்கி கொள்ளையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் எதுவித பக்கச்சார்பற்ற விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஏன் ராஜித சேனா ரத்னவுக்கு எதிராகவும் நாம் பல முறைப்பாடுளை மேற்கொண்டுள்ளோம். இது தொடர்பில் இதுவரை எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை, டொப் டென் என்றதலைப்பில் நாம் பலருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளோம்  இந்த விடயங்களையும் எவரும்  கண்டுகொள்ளவில்லை. 

நாட்டில் தற்போது இடம்பெறும் பொம்மையாட்சி தங்களின் தவறுகளை மறைக்கவே இன்று எமது காலத்தில் ஊழல் இடம்பெற்றதாக விசாரணை நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.