சுஷ்மா சுவராஜை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க. ஆலோசனை..

தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம்(ஜூலை) 25–ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமி‌ஷன் தொடங்கி விட்டது. தேர்தல் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மனுத் தாக்கலும் தொடங்கியுள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியிடும் பட்சத்தில் ஜூலை 17–ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். ஜூலை 20–ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதால் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி, அனைத்து கட்சிகளும் ஏற்கக்கூடிய பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். 

இதில் ஒருமனதாக முடிவு ஏற்படவில்லை என்றால் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை நிறுத்தும். பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் கொண்ட மூவர் குழுவை கடந்த 12–ந்தேதி அமித் ஷா அமைத்தார். 

இந்த குழு தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தும். இக்குழுவானது நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்து பேசுகிறது. 

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார்? என்பதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் முன்னிலை பெற்று உள்ளார் என உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளதாக ஆங்கில மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.

ஜனாதிபதி வேட்பாளருக்கு பா.ஜனதா வகுத்து உள்ள அனைத்து தகுதிகளிலும் முதன்மையிடம் பிடித்து இருப்பவர் சுஷ்மா சுவராஜ். நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சித்தராம் யெச்சூரியை சந்திக்கும் போது பா.ஜனதா குழுவில் இடம்பெற்று உள்ள தலைவர்கள் சுஷ்மா பெயரை அறிவிப்பது தொடர்பாக பேசுவார்கள் எனவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன. 

சுஷ்மா சுவராஜ் ஒரு வெற்றி வேட்பாளராக இருக்கிறார் என்பதே அனைத்து தரப்பு கருத்தாக உள்ளது. சுஷ்மா சுவராஜ் ஜனாதிபதி ஆவதற்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பிராந்திய கட்சிகளிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும் என்றும், ஒருசில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.