முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை அவுஸ்திரேலிய தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் விபரிப்பு

 

சுஐப்.எம்.காசிம் 

ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டம் காட்டாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது கடந்த ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும; தாக்குதல்களும் இன்னும் நிறுத்தப்படாது தொடர்ந்து இடம்பெறுவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்ஸன் அவர்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

 

 

அவுஸ்திரேலிய துதூவரை இன்று நண்பகல் (13.06.2017) கைத்தொழில் மற்றும் வர்த்தக  அமைச்சில் சந்தித்து பேசிய போதே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். 

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக தீவிரம் அடைந்து இருக்கும் கூர்மையான செயற்பாடுகளை தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் விபரித்த போது, இந்த விடயங்கள் குறித்து தாங்களும் அறிந்துள்ளதாகவும் இதனைக் கவனத்தில் கொள்வதாகவும் தெரிவித்தார். 

‘கடந்த அரசாங்க காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கொடூரங்களுக்கும் தற்போதைய அரசாங்க காலத்தில் இடம்பெற்று வரும் மோசமான  சம்பவங்களுக்கிடையே எந்த வித்தியாசங்களையும் நாங்கள் காணவில்லை. சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டி முஸ்லிம்களை நிம்மதியாக வாழச் செய்யுமாறு பலமுறை நாங்கள் வலியுறுத்தி வருகின்ற போதும், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய இனவாதிகளையும், சூத்திரதாரிகளையும் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவதில் தயக்கம் காட்டப்படுகின்றது’ இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார். 

 

இத்தனை அநியாயங்கள் நடந்தபோதும் முஸ்லிம்கள் இன்னுமே பொறுமையாகவே இருக்கின்றனர். பெரும்பாலான சிங்களவர்கள் முஸ்லிம்களுடன் நல்லுறவுடனும், அன்புடனும் வாழ்ந்து வருகின்ற  போதும் ஒரு சிறிய இனவாதக் கூட்டம் இந்த சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றது.  பொதுபலசேனா இயக்கத்தின் செயுலாளர் ஞானசாரதேரர் இஸ்லாத்தையும் குர்ஆனையும், முஸ்லிம்களையுமு; கேவலப்படுத்தி வருவதில் முன்நின்று செயற்படுகின்றார். அவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் உள்ளபோதும் அவர் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

‘முஸ்லிம்களுக்கு எதிரான செற்பாடுகளை எதிர் கொள்வதில் உங்கள் சமூகம்  ஒற்றுமையுடன் செயற்படுகின்றதா?’   என்று அவுஸ்ரேலிய துதூவர் வினவிய போது, அமைச்சர் ரிஷாட் பின்வருமாறு தெரிவித்தார்.  அரசியல் கொள்கையுடைய முஸ்லிம் கட்சிகள் பல உள்ளபோதும் சமூகப் பிரச்சினையை பொதுவான தளத்தில் நின்று கொண்டு ஒற்றுமையுடன்  எதிர்கொள்கின்றோம். சமூகத்திற்கு எதிரான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றோம். முஸ்லிம்களின் ஆன்மீக இயக்கமான ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலில் அவர்களுடன் இணைந்து அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் சமூகத்தின் நலனைக் காக்க இணைந்து செயற்படுகின்றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.