பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாணயத்தின் மதிப்பில் வீழ்ச்சி…

பிரிட்டிஷ் நாணயமான பவுண்டு, பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகள் தொங்கு நாடாளுமன்றத்துக்கு வழிவகுத்த நிலையில், கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.

நேற்றிரவே பவுண்டின் மதிப்பு விழுந்திருந்தது; ஆனால் இன்று லண்டனில் வர்த்தகம் தொடங்கியதும், அதன் மதிப்பில் மேலும் 2 சதவீதம் விழுந்து, ஒரு பவுண்டுக்கு அமெரிக்க டாலர் 1.27 என்ற அளவில் வந்த்து. பிரிட்டனில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மையைப் பற்றி சந்தைகள் கவலை அடைவதை இது காட்டுகிறது.

 

யூரோவுக்கு எதிராக பவுண்டின் மதிப்பு 1.7 சதவீதம் விழுந்து, ஒரு பவுண்டின் மதிப்பு 1.13 என்றாகியது.

ஆனால், முக்கிய பங்குகளின் மதிப்பு குறீயிட்டெண் 0.9 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது. 

தற்போதைய பிரதமர் தெரீசா மே வெற்றிபெறுவர் என்று வணிக நிறுவனங்கள் எதிர்பார்த்தன. ஆனால் அந்த கட்சி மக்களவையில் பெரும்பான்மையை பெறவில்லை. 

இந்த தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை அளித்துள்ளன என்ற நிலையில், பவுண்ட் மதிப்பு இன்னும் கூட கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்கக்கூடும். 

ஆனாலும், இதை தாண்டி மீண்டும் பவுண்ட் மதிப்பு குறையவில்லை என்பது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது(Brexit) கடுமையானதாக இருக்கும் என்ற வாய்ப்பை குறைக்கும் என்பதை பிரதிபலிக்கிறது. 

தொங்கு நாடாளுமன்றம் என்பது ஒரு ஸ்திரத்தன்மையற்ற நிலையை உணர்த்தும் என்றாலும் இது ”மென்மையான பிரெக்ஸிட்”டிற்கான வாய்ப்பை அளிக்கலாம் என்று இ டி எக்ஸ் என்ற பிரிட்டனில் உள்ள நிதிநிறுவனத்தை சேர்ந்த நீல் வில்சன் கூறுகிறார்.

நன்றி-BBC