இராணுவத்தினர் மூலம் அடக்கப்படவுள்ள இனவாதச் செயற்பாட்டாளர்கள் : ஜனாதிபதி

 நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் சமகால அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலை நீடித்தால் அதனை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக நெருக்கடியை ஏற்படுத்த முனைவோர் இராணுவத்தினர் மூலம் அடக்கப்படுவர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து திட்டமிட்ட வகையிலும் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த தாக்குதல்களை கட்டுபடுத்துவதற்கு பொலிஸாரால் முடியவில்லை என்றால் இராணுவத்தை களமிறக்கி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்வோரை கட்டுப்படுத்த பொலிஸாரினால் முடியவில்லை என்றால் இராணுவத்தினரை ஈடுபடுத்த எதிர்வரும் நாட்களில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முஸ்லிம் குழுவினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அனர்த்த நிலைமை தொடர்பிலும் நாட்டின் எதிர்வரும் நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக கூட்டப்பட்டிருந்த இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் , ரிஷாட் பதியூதீன் மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தகவல் வெளியிட்டுள்ளனர்.