உயரிய மதிப்பை கொண்டு அமைச்சர் ஹக்கீம் சாதித்ததென்ன?

அமைச்சர் ஹக்கீம் ரணிலுடனான தொடர்பை பயன்படுத்தி முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்கலாமே?

அமைச்சர் ஹக்கீம் இலங்கை வந்திருந்த மோடியை முன் வரிசையில் நின்று சந்தித்திருந்தார்.தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து சீனா பறந்துவிட்டார்.ஒரு முஸ்லிம் தலைவர்  இலங்கை நாட்டின் ஆட்சியாளர்களுடன் இத்தனை உயரிய இடத்தில் இருப்பது நமக்கும் பெருமை தான்.இருந்தாலும் இந்த உயரிய மதிப்பை கொண்டு அமைச்சர் ஹக்கீம் சாதித்ததென்ன?

சாய்ந்தமருது அம்பாறைக்கு இடமாற்றப்பட்டு விடுமா என்று பேசுமளவு மு,காவின் கோட்டையாக அம்பாறை மாவட்டத்தின் நிலை உள்ளது.அண்மையில் கூட சாய்ந்தமருதில் இயங்கி வந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம் இடமாற்றப்பட்டிருந்தது.அமைச்சர் ஹக்கீம் இந்த தொடர்புகளை வைத்துக்கொண்டு இவற்றை சாதிக்க முடியாதா? தூப்பாங்கட்டென்றால்,அது குப்பைகளை அகற்ற வேண்டும்.அதனை அலுமாரியில் வைத்து அழகு பார்ப்பதாக பெருமை படுவதில் எதுவுத அர்த்தமில்லை.

ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் சர்வதேசத்துக்கு  பல பக்க ஆதரவுகள் இருப்பதாக காட்டுவது மிக முக்கியமானது.அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு தனக்கு இருக்கின்றதென காட்ட அமைச்சர் ஹக்கீமை சீனா போன்ற நாடுகளுக்கு அழைத்து செல்வது இவ்வாட்சியாளர்களுக்கு சிறப்பானது.அவர்களுக்கு சிறந்தது என்பதற்காக நாம் வால் பிடித்து செல்ல முடியாது.அவ்வாறான தொடர்புகளை வைத்து கொண்டு அமைச்சர் ஹக்கீம் சாதித்ததென என்பதே மிக முக்கியமானதாகும்.

மஹிந்த ராஜபக்ஸ தனது ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பௌசி மற்றும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஆகியோரை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார்.இவர்களை இவ்வாறான விஜயங்களின் போது அழைத்தும் செல்வார்.அவற்றுக்கான காரணம் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்குவார்கள்.ஒரு போதும் அழுத்தம் வழங்க மாட்டார்கள்.இது போன்று தான் இன்று ஐ.தே.க அமைச்சர் ஹக்கீமை பயன்படுத்தி கொண்டிருக்கின்றதா என்று சிந்திக்க தோன்றுகிறது.இலங்கையின் பிரபலமான முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் இவர்களுக்கு ஆதரவாக இருப்பது கௌரவம் தான் என்பதில் மறுப்பில்லை.

இன்று இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாணிக்கமடுவில் வைக்கப்பட்ட சிலையை ஒரு வாரத்தில் அகற்றித் தருவாக அமைச்சர் ஹக்கீமிடம் வாக்குறுதி அளித்திருந்ததாக அமைச்சர் ஹக்கீம் கூறியிருந்தார்.அது ஆறு மாதம் சென்றும் நிறைவேற்றப்படவில்லை.சீனா சென்று வரும் வழியிலாவது அதனை அமைச்சர் ஹக்கீம் பிரதமரிடம் கேட்டு வர வேண்டும்.அமைச்சர் ஹக்கீம் இது போன்ற சமூக விடயங்களை கேட்கும் இடத்தில் அவரை இறக்கிவிட்டு சில வேளை பிரதமர் ரணில் சென்று விடலாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.