கல்முனை வீடமைப்பு கிளைக் காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை : றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி

ஊடகப்பிரிவு

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கல்முனைக் கிளைக் காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இன்று (2017.05.09) காலை உறுதியளித்தார்.

அமைச்சரைவக் கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்த அவர்  இந்தக் கிளைக்காரியாலயத்தை இடமாற்ற மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து அம்பாறை முஸ்லிம் பிரதேச மக்கள் கவலைகொண்டுள்ளதாகவும் இவ்வாறான நிலை ஏற்பட்டால் அந்தப் பிரதேச மக்களுக்கு காரியங்களை நிறைவேற்றுவதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான சூல்நிலை உருவாகுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இது தொடர்பான எழுத்து மூல கடிதமொன்றையும் அமைச்சர் றிஷாட் சமர்ப்பித்தார். இந்த விடயங்களை கேட்டறிந்த பின்னர் காரியாலயத்தை இடமாற்றப்போதில்லை என்ற உறுதி மொழியை அவர் வழங்கினார்.

இது தொடர்பில் ஏற்கனவே அம்பாறை மாவட்ட மக்கள் காங்கிரஸ் பிரமுகர்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீனை சந்தித்து கல்முனைக்கிளைக் காரியாலயம் மாற்றப்படும் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.