மஸ்கெலியா வைத்தியசாலையில் நிலவிவரும் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படுமா ?

க.கிஷாந்தன்

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் அடிப்படை பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுமா என நோயர்கள் மற்றும் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

‘நோயாளர்கள் தங்கி சிகிச்சைப் பெறும் வகையில், வைத்தியசாலையில் 6 வார்டுகள் உள்ளன. வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேற்று பிரிவு, பல் வைத்தியப் பிரிவு என்பன உள்ளன.

மேலும், 8 மணித்தியாலய வேலைப்படி 6 வார்டுகளுக்கு 18 தாதியரும் வெளிநோயாளர் பிரிவுக்கு 2 பேரும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு 2 பேரும் பல் வைத்தியப் பிரிவுக்கு ஒருவரும் மகப்பேற்று பிரிவுக்கு ஒருவருமாக 24 பேர் தேவைப்படுகின்றனர்.

ஆனால், தற்போது 3 பேர் மட்டுமே கடமைகளில் உள்ளனர். சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி, லக்கம், கிரிவன் எலிய, குடா மஸ்கெலியா இவ்வாறான பகுதிகளில் சுமார், 3 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் நோய்களுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கே வருகின்றனர். இவ்வைத்தியசாலையில், ஆளனிப் பற்றாக்குறையும் உள்ளது.

இந்த வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள மின்தூக்கி (லிப்ட்) பழுதடைந்த நிலையிலுள்ளதால் கீழ் மாடியிலிருந்து மேல் மாடிக்கு நோயாளர்களைத் தூக்கிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவற்றை நிவர்த்தி செய்யுமாறு நோயளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.