இறக்காமம் அனர்த்தம் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது , அமைச்சர் றிசாத் அவர்களும் விஜயம்

எம்.ஏ.றமீஸ்

உணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிகிச்சை பெற்று வந்த சுமார் ஆயிரத்திற்கும்அதிகமாக நோயாளர்களில் பெரும் எண்ணிக்கையானோர் சுகமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமை அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாங்காமம் கிராமத்தில் உள்ளமுஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வழங்கப்பட்ட உணவு நஞ்சடைந்தமையால் அவ் உணவினை உட்கொண்ட மூவர் மரணடைந்ததுடன் ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுகவீனமுற்ற நிலையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தனர்.

இவ்வாறு வைத்திய சிகிச்சை பெற்று வந்த இறக்காமம் பிரதேச வைத்தியசாலையிலேயே அதிக எண்ணிக்கையானோர்அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் தற்போது 22 நோயாளர்களே இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் வேறு வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டதுடன் பெரும்எண்ணிக்கையானோர் தமது இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை இதனோடு தொடர்புடைய அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவர்களில் கணிசமானோர் இன்றைய தினம் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அவ்வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள்தெரிவிக்கின்றன.

கந்தூரி வைபவத்தில் வழங்கப்பட்ட உணவு நச்சுத் தன்மை ஏற்பட்டதற்கான காரணத்தினை கண்டறியும் வகையில் நேற்று மாலைஅப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த சுகாதாரத் திணைக்களத்தின் தொற்று நோயியல் நிபுணத்துவ உயரதிகாரிகள் பொதுமக்களுக்குவழங்கப்பட்ட உணவு மாதிரிகள், சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பகுப்பாய்விற்காக கொண்டுசென்றுள்ளனர்.

குறித்த பகுப்பாய்வின் இறுதி அறிக்கை 48 மணித்தியாலங்கள் முதல் 72 மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள்ளேயே வழங்கக் கூடியதாக இருக்கும் என்பதால் இதற்கான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கிடைக்கக் கூடியதாய் அமையும் என இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.எம்.றசீன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடும் வகையில் அப்பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் சுகம் விசாரித்ததோடு அங்கு சிகிச்சைபெற்று வருபவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் ஒரு தொகைப் பணம் வைத்தியசாலை நிருவாகத்தினரிடம் வழங்கி வைத்தார். அத்தோடு இறக்காமம் உள்ளிட்ட அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைசாலைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தவிர அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டு மரணமடைந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்றுதுக்கம் விசாரித்ததுடன் வருமானம் குறைந்த இரு குடும்பத்தவர்களுக்காக இரண்டு வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக வாக்குறுதி வழங்கியதுடன் மரணித்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஒரு தொகைப் பணத்தினையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.