எட்கா உடன்படிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க பிரதமர் இந்தியா செல்லவுள்ளார்

எட்கா உடன்படிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவு உடன்படிக்கை (எட்கா) உடன்படிக்கையை கைச்சாத்திடுவது குறித்த இறுதி நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கான விஜயங்களின் பின்னர் பிரதமர் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

பிரதமரின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, சர்வதேச வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.