சிலர் வைக்கோல் பட்டறையில் உள்ள நாயைப் போல் உண்பதுமில்லை உண்ணவிடுவதுமில்லை…

 

இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா

நேற்று தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தக வெளியீடு தொடர்பில் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.இவருடன்  பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்தீனும் சென்றிருந்தார்.இதனை மு.காவின் போராளிகள் அரசியலாக்கி சமூக வலைத் தளங்களில் பகிர்வதை அவதானிக்க முடிகிறது.

“பஷீருடன் சிராஸ் நூர்தீன் சென்றாராம்.சிராஸ் நூர்தீன் அமைச்சர் றிஷாதின் ஆதரவாளராம்.அமைச்சர் றிஷாதின் பின்னால் பஷீர் உள்ளாராம்.”இவர்கள் ஒரு வழக்கறிஞரின் பண்புகளை முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.அவர்கள் பணம் கொடுத்தால் யாருக்கும் ஆதரவாக பேசுவார்கள்.சிராஸ் நூர்தீன் என்பவர் அமைச்சர் றிஷாதுடன் உள்ளவர் என இவர்கள் எதை வைத்து கூறுகிறார்கள்.அமைச்சர் றிஷாதின் சட்ட ரீதியான விடயங்களை வழக்கறிஞர் ருஸ்தி ஹபீபே மேற்கொண்டு வருகிறார்.அமைச்சர் றிஷாத்துடன் அரசியல் தொடர்பான எந்த விடயங்களிலும்  சிராஸ் நூர்தீன் தொடர்புமில்லை.இப்படி இருக்கையில் இவரை அமைச்சர் றிஷாதுடன் தொடர்பு படுத்தி எந்த அடிப்படையில் கூற முடியும்.

இவர்கள் கூறுவதை உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.மாற்றியும் சிந்திக்க வேண்டுமல்லவா? இன்று இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பான பல முக்கியமான வழக்குகளில் தனது உயிரை பணயம் வைத்து போராடிக்கொண்டிருப்பவர் தான் வழக்கறிஞர் சிராஸ் நூர்தீன்.இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கின்றேன்.இவர் அமைச்சர் றிஷாதுடன் அரசியல் தொடர்பில் உள்ளவராக இருந்தால் சமூக ரீதியான வழக்குகளில் இவரின் பங்களிப்பில் அமைச்சர் றிஷாதுக்கும் பங்குண்டல்லவா? அப்படியாக இருந்தால் அமைச்சர் றிஷாத் சமூக ரீதியாக மக்களிடம் பிரபல்யம் தேடாது செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார் என்பதே இங்கு மிக முக்கியமான விடயம்.மு.கா போராளிகளின் இவ்வாறான செயல்கள் மூலம் அது வெளிக்கொணரப்படுகிறது.

இன்று சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் இலங்கை முஸ்லிம்களின் முக்கியமான பல வழக்குகளை எதிர்கொண்டு வருவதால்,இந் நேரத்தில் அவருக்கு அரசியல் சாயம் பூசுவது பேரின மக்களிடத்தில் வேறு செய்தியை கொண்டு சேர்த்து விடும்.அமைச்சர் றிஷாதுக்கு எதிராக பேரின வாதிகளை திருப்புவதில் சிலர் பகிரத பிரயத்தனம் அன்று தொடக்கம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.மு.காவின் போராளிகள் ஒரு விடயத்தை கூறும் போது அதில் உள்ள சாதக பாதங்களை அறிந்து கொள்வது மிக முக்கியமானது.வைக்கோல் பட்டறையில் உள்ள நாயைப் போல் உண்பதுமில்லை உண்ண விடுவதுமில்லை என்ற வகையில் செயற்பட வேண்டாம்.