வீரவன்சவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடியுள்ள மஹிந்த

சிறையில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிக கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீரவன்சவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

விமல் வீரவன்ச உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளதால் அவரது நிலைமை தீவிரம் அடைந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து பார்க்குமாறு மஹிந்த கோரிக்கை விடுத்துள்ளர்.

அத்துடன் விமலின் மகள் தனது தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் மனநிலைமையை புறிந்துக் கொள்ளுமாறும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

பிணை வழங்க கூடிய விடயம் தொடர்பில் அரசாங்க சட்டமா அதிபரின் எதிர்பிற்கு மத்தியில் இவ்வாறு தடுத்து வைத்திருப்பது நாட்டின் நீதிமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான எண்ணம் தோன்றிவிடும் என மஹிந்த, ஜனாதிபதி பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கடந்த ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின், சகோதரர் மற்றும் பிள்ளைகள் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களின் விடுதலை குறித்து மஹிந்த அரசாங்கத்தின் கோரிக்கை விடுக்கவில்லை. எனினும் வீரவன்சவின் விடுதலை தொடர்பில் மஹிந்த அக்கறை கொண்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.