கண்டி, மாத்தளை மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு அரச காணிகள் பிரித்து வழங்கப்படும்:மனோ உறுதி

அரச பெருந்தோட்ட காணிகள் கண்டி, மாத்தளை மாவட்டங்களில், அந்த வந்த பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், தோட்டங்களை அண்மித்து வாழும் சிங்கள மக்களுக்கும் பிரித்து வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.  

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம், கூட்டணிக்கும், அரச பெருந்தோட்ட துறைசார்ந்த அமைச்சர் கபீர் ஹஷிமுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களை அடுத்து, கண்டி, மாத்தளை மாவட்டங்களை பெரும்பாலும் உள்ளடக்கிய அரசுக்கு சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களின் காணிகள் வெளியாருக்கும், அரசின் ஏனைய அபிவிருத்தி நோக்கங்களுக்கும் பிரித்து வழங்கப்படுவது இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுகளின் போது இந்த தோட்டங்களில் வாழும் மலையக தமிழ் குடும்பங்களுக்கு வாழ்வாதார நோக்கில் காணிகள் பிரித்து கொடுக்கப்படும். 

பெருந்தோட்டங்களை அண்மித்து வாழும் கிராமத்தவர்களுக்கும் இதேபோல் காணிகள் தேவைப்படுவதாக குறிப்பிட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் எம்பீக்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் பிரதமர் என்னிடம் தெரிவித்தார். 

இத்தோட்டங்களில் வாழும், இந்நாள், முன்னாள் மலையக தமிழ் தொழிலாளர் குடும்பங்களின் எண்ணிக்கைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணிகளின் பரப்பளவு தொடர்பான விபரங்களை கண்டறிந்து, வாழ்வாதார காணிகள் அதே தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும். 

இவை வீட்டு திட்டங்களுக்காக வழங்கப்படுகின்ற ஏழு பர்சஸ் காணியுடன் தொடர்பில்லாத வாழ்வாதார காணிகளாக கருதப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில் கண்டி, மாத்தளை மாவட்ட தோட்ட மற்றும் கிராமத்து மக்களுக்கு காணிகள் வழங்கப்படும் செயற்பாடுகள் எந்தவித முரண்பாடுகளும் இல்லாத விதத்தில் கவனமாக முன்னெடுக்கப்பட வேண்டும். 

இதுதொடர்பில் கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க கூட்டணியின் கண்டி மாவட்ட எம்பி வேலுகுமாரை நாம் நியமித்துள்ளதாகவும் பிரதமருக்கு நான் தெரிவித்துள்ளேன்.